சுக்ர பகவான் மஹாவிஷ்ணுவிற்கு கொடுத்த சாபம்.
மஹாவிஷ்ணுவின் 25 வது அவதாரமாக கருதப்படுகிறது.
தைமாதம் உத்திரட்டாதி நக்ஷத்திரம் அல்லது சுக்ல பக்ஷ பஞ்சமி திதியில் ஹரதத்தரின் 'குரு பூஜை'யும் மாசி மாதத்தில் "சப்த ஸ்தான உற்சவமும்" கொண்டாடப்படுகிறது.
கஞ்சனூர் சுக்ர பகவானின் தலமாகும்.
ஒருமுறை, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போர் மூண்ட பொழுது, தேவர்களுக்காக போரிட்ட மஹாவிஷ்ணுவை எதிர்க்க முடியாமல், அசுரர்கள் பயந்து ஓடி தங்களின் குலகுருவான சுக்ராச்சாரியாரின் குடிலில் தஞ்சம் புகுந்தனர். அச்சமயம் சுக்ர பகவான் வெளியில் சென்றிருந்தார். அசுரர்களை பின் தொடர்ந்து வந்த விஷ்ணு, அவர்களின் மேல் தன் சக்ராயுதத்தை ஏவினார். அந்த ஆயுதம் அசுரர்களை மட்டுமின்றி சுக்ர பகவானின் மனைவியான 'உர்ஜஸ்வதி' யையும் சேர்த்து அழித்தது.
அப்பொழுது அங்கு வந்த சுக்ராச்சாரியார், போரில் ஈடுபடாத தன் மனைவியையும் கொன்றது சரியல்ல. அதனால் நீ மண்ணுலகில் பல ஜன்மங்கள் மனிதனாக பிறக்கக் கடவாய்! என சாபம் அளித்தார்.
பின், சுக்ராச்சாரியார் 'சிவாய நம:' என தியானித்து, 'அமிர்தசஞ்ஜீவனி' மந்திரத்தை ஜபித்து அனைவரையும் உயிர்ப்பித்தார்.
மஹாவிஷ்ணுவும், இந்த சாபத்திற்கு விமோசனம் வேண்டி, சிவபெருமானைக் குறித்து கடுந்தவம் மேற்கொண்டார். சிவபெருமானும் அவரது தவத்தில் மகிழ்ந்து, பக்தனின் சாபத்தை முழுவதும் நீக்க இயலாது. அதை குறைக்கச் செய்யலாம். நீ 25 ஜன்மாக்கள் பூமியில் அவதரித்து, 25 வது அவதாரமாக கஞ்சனூரில் வைணவக் குடும்பத்தில் பிறந்து பின் 'சிவபரதத்துவத்தை' நிலைநாட்டியபின், எம்மை வந்தடைந்து சாபம் நீங்கப் பெறுவாய் என்றருளினார்.
அதன்படியே, சுக்கிரபகவான் அளித்த சாபத்தை உலக நன்மைக்காக பரசிவானந்தத்தை பரப்பும் முகமாக சிவன் அருள் பெற்று பிறந்தார்.
சிவதத்துவத்தை உலகுக்கு உணர்த்த எண்ணிய விஷ்ணு, வாஸுதேவர் என்ற 'பாஞ்சராத்ர வைணவருக்கு' மகனாகப் பிறந்தார். குழந்தைக்கு 'சுதர்சனன்' என்று பெயர் சூட்டினர்.
குழந்தைக்கு பேச்சு வரத் தொடங்கியதும், கூறிய முதல் வார்த்தை 'சிவசிவ'. இதைக் கேட்டதும் தீவிர வைணவர்களான அவர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றனர். நடக்க ஆரம்பித்ததும் ' அக்னிபுரீஸ்வரர்' ஆலயத்திற்கே குழந்தை சென்றது. எவ்வளவு முயற்சித்தும் கண்டித்தும் அவர்களால் சுதர்சனனின் இப்பழக்கத்தை மாற்ற இயலவில்லை. வளர வளர வாக்கில் சிவநாமமும், நெற்றியில் திருநீறும், ருத்ராக்ஷமுமாகவே திரிந்தான் சுதர்சனன்.
நம் குல வழக்கப்படி பூணூல் அணிவித்தால் மாறுவானோ?! என்று காயத்ரி மந்திரத்துடன், 'நாராயணா' நாமத்தை ஜபிக்க வலியுறுத்தினார் தந்தை. அவர் முயற்சிகள் எதுவும் பலிக்காமல் போகவே, கோபங்கொண்டு வீட்டை விட்டு துரத்தி விட்டார்.
ஆயினும் அச்சிறுவன் பசி பட்டினியுடன் அன்ன ஆகாரமின்றி தன் உயிர் சிவனுக்கே என்ற சிந்தனையுடன் அக்னிபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று, அங்கு நடந்த பூஜை மற்றும் சிவபாராயணம் கேட்டவாறே தூங்கிவிட்டான்.
நள்ளிரவில் விழிப்பு வந்த நிலையில் தான் தன் வீட்டிற்கும் செல்ல முடியாத நிலையை உணர்ந்த சிறுவன், கோயிலின் தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் அமர்ந்து தன் பக்தியில் என்ன குறை?என்று பலவாறு வருந்தி அழலானான். கற்பகாம்பிகையும் குழந்தையின் பால் மனமிரங்கி, சோதித்தது போதும்! உடன் அக்குழந்தைக்கு அருள் செய்யும்படி விண்ணப்பித்தாள்.
அதனைச் செவியுற்ற சிவபெருமானும், தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் சிறுவன் சுதர்சனனுக்கு காட்சியளித்து சகல கலைகள், வேத ஆகமங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களையும் போதித்து, 'ஹரன்' என போற்றப்படும் சிவனுக்கே தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் பக்தியுடன் தத்தம் கொடுக்க துணிந்ததால், 'ஹரதத்தர்' என்ற நாமத்தையும் சூட்டியருளினார்.
அடுத்த நாள் காலை குழந்தையான ஹரதத்தர் மஹாதீட்சண்யத்துடன் தன் தந்தையை எதிர் கொண்டு வாதித்து, ' சிவநாம பரதத்துவத்தை' விளக்கினார்.
தன் தோல்வியை ஒப்புக் கொள்ள இயலாமல் தன் மகனைக் கொல்லவும் துணிந்தார்.
நீ கூறுவது உண்மையாயின் பழுக்கக் காய்ச்சிய இரும்பு ஆசனத்தில் அமர்ந்து நிரூபிக்கக் கூறினார். சிறுவனும் அதை ஏற்று, சிவநாமம் ஜபித்தவாறே, தகிக்கும் இரும்புப் பீடத்தில் அமர்ந்து சிவதத்துவத்தைக் கூற, தகதகவென தகித்துக் கொண்டிருந்த இரும்பு ஆசனம் சந்தனமாய்க் குளிர்ந்தது.
ஹரதத்தர் மேல் பூமாரி பொழிய, அக்னீஸ்வரர் கற்பகாம்பிகையுடன் காட்சியளித்தார்.
அதன்பின், ஹரதத்தரின் தந்தை உட்பட அனைத்து வைணவர்களும், அவரிடம் மன்னிப்பு கோரி, ஹரதத்தரிடம் " சிவதீக்ஷை" பெற்றனர்.
இன்றும், கஞ்சனூர் திருக்கோயிலில், சிவலிங்கம் அருகே ஹரதத்தர் சைவஸ்தாபனம் செய்யும் திருக்கோலம் காணப்படுகிறது.
பின் வந்த நாளில் சுப்ரதீபர் என்பவரின் மகளாக 'பங்கஜவல்லி' என்ற நாமத்துடன் அவதரித்திருந்த மஹாலட்சுமி தாயாரை மணம் புரிந்தார்.
ஹரதத்தர் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு பூண்டு, அவைகளையும் சிவ வடிவமாகவே எண்ணினார்.
அப்படித்தான், தன் சிவபூஜையின் போது தாகம் மேலிட ஒரு நாய் ஹரதத்தரை நெருங்கி வந்தது. உடன் ஹரதத்தரும் பூஜைக்கு வைத்திருந்த சங்கு தீர்த்தத்திலிருந்து நாயின் வாயில் விடவும், கூடியிருந்த மற்ற பக்தர்கள் அவரது மஹிமை அறிந்தாலும், அவரது அச்செயல் அவர்களை துணுக்குறச் செய்தது. அதற்கு ஹரதத்தர், சிவபெருமானே தன் மேல் அன்பு கொண்டு நாய் வடிவில் வந்ததாக விளக்கினார்.
ஒருமுறை ஹரதத்தரின் தாயார் சாயங்கால சிவபூஜை நிவேதனத்துக்கு வேண்டிய நெல்லை வெயிலில் உலர்த்தி வைத்து இருந்ததை ஒரு மாடு வந்து மேயவும், கொம்பால் அதை அடித்து விரட்டினார். 'காளை மாடு' சிவபிரானின் வாகனமாயிற்றே. அது அவருக்கே நிவேதனம் செய்தது போல் தான் என்று அறிவுறுத்தினார்.
அவ்வண்ணமே அவரது மனைவி பங்கஜவல்லி, சமையலுக்காக அரிசியை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள். அவசர வேலையாக அரிசியை அப்படியே முற்றத்தில் வைத்து விட்டு உள்ளே செல்லவும், அப்பொழுது ஒரு நாய் வந்து அந்த அரிசியை தின்றது. திரும்பி வந்தவள் நாய் அரிசியை உண்பதைக் கண்டு அதை விரட்டும் நோக்கத்தில் பக்கத்தில் இருந்த அறுவாள்மனையை நாயின் மேல் எறிந்தாள். விதிவசத்தால் நாய் இறந்தது.
இதைக் கண்ட ஹரதத்தர், நாய் உண்ணும்படி கவனக் குறைவாக இருந்தது உன் தவறு என்று தன் மனைவியைக் கண்டித்து, இற்ந்து கிடந்த நாய்க்கு விபூதி பூசி ருத்ராக்ஷம் அணிவித்து அதன் காதில் சிவ பஞ்சாட்சரம் ஓதினார். உடன் புஷ்பக விமானம் வந்து அந்த நாயை கூட்டிச் சென்றது. அதைக் கண்டு ஓரளவு தான் அவர் மனம் சமாதானம் அடைந்தது.
ஆயினும், தன் தாயும் மனைவியும் செய்த சிவ அபராதத்திற்கு தகுந்த பிராயசித்தம் செய்ய வேண்டும் என்று யோசித்து, ஒரு ஓலையில் பிராயச்சித்த ஸ்லோகம் ஒன்றை எழுதலானார்.
தெரிந்தும், தெரியாமலும் செய்த பாபங்கள் மகத்தான பாபங்களாக இருந்தாலும்’ என்ற கருத்துடைய – (ச்லோகத்தின்) முதல் வரியை எழுதினார்.
"ஞானாக்ஞான ப்ரயுக்தானாம் பாபனாம் மகதாயி"
என்று எழுதியவருக்கு என்ன பரிகாரம் எழுதுவது என குழப்பம் மேலிட, அதை பூர்த்தி செய்ய இயலாமல், அப்படியே வீட்டின் கூரையில் சொருகிவிட்டு, குளிப்பதற்காக ஆற்றங்கரைக்குச் சென்றார்.
திரும்பி வந்து தன் நித்ய பூஜை அனுஷ்டானங்களை முடித்து யோசனையுடன் சொருகி வைத்த ஓலைச் சுருளை எடுத்துப் பார்த்த போது,
"ஏகாந்த நிஷ்க்ரதி: சம்போஸ் ஸக்ரு தேவ ஹி கீர்தனாத்"
என்ற இரண்டாவது வரி எழுதப்பட்டு நிறைவுற்றிருந்தது.
அதாவது, ஏகாந்தமாய் தனிமையில் இருந்து, சிவ நாமம் ஓதுவதே பரிகாரம் எனும் அர்த்தம் ஆக எழுதப்பட்டிருந்தது.
ஆச்சரியத்துடன் தன் மனைவியை அழைத்து இதை யார் எழுதினார் என கேட்கவும், "நீராடச் சென்ற நீங்கள் தான் ஏதோ ஞாபகம் வந்தவராக திரும்பி வந்து ஓலையை எடுத்து எழுதி விட்டு திரும்ப குளிக்கச் சென்றீர்" என்றாள்.
அந்த சர்வேஸ்வரனே தன் ரூபத்தில் வந்து எழுதிச் சென்றதை உணர்ந்து மனம் நெகிழ்ந்தார். உடனேயே தன் மனைவியையும் தாயாரையும் அது முறைப்படி பரிகாரம் செய்யவும் வைத்தார்.
ஒருமுறை, கோயில் பசுவிற்காக பெரிய வைக்கோல் கட்டை சுமந்து வந்த 'தேவசம்பு' என்ற வயோதிகர், கால் இடறி வைக்கோல் கட்டை கீழே தவற விட்டார். கீழே தாழ்வான பகுதியில் கட்டப்பட்டிருந்த இளங்கன்றுக் குட்டியின் மேல் விழுந்து அவ்விடத்திலேயே கன்று உயிரிழந்தது.
உடன் 'சிவ சிவ' என்று கதறி அழுத தேவசம்புவிடம், கோயில் நிர்வாகத்தார் மற்றும் வேதியர்கள் பசு கொன்ற பாவம் தீர, காசிக்குச் சென்று கங்கையில் நீராடி வா! என்று பரிகாரம் கூறினர்.
தன் இயலாமையை நினைத்து வருந்திய தேவசம்பு, ஹரதத்தரை சரணடைந்தார். ஹரதத்தரும், அறியாமல் செய்தது தவறு தான் என்றாலும், அவர் உடனே 'சிவ சிவ' என்று கூறியதால் அவர் பாவமும் அகன்றது. சிவநாமத்தைக் கேட்டதால், கன்றும் நற்கதி அடைந்தது என்றார். இதை வேதியர்கள் ஏற்க மறுத்தனர்.
அப்படியென்றால், 'கோயில் நந்தி சிலைக்கு அவரை அருகம்புல் கொடுத்து உண்ணச் செய்யுங்கள்' பார்க்கலாம் என்று சவால் விட்டனர்.
அவ்வாறே, ஹரதத்தர் தேவசம்புவை பணிக்க, அவரும் நந்தியம்பெருமானுக்கு, அருகம்புல்லைக் கொடுக்கவும், நந்திதேவரும் அருகம்புல்லை உண்டு அருளினார். வேதியர்களும் சிவநாம மஹிமையை உணர்ந்தனர்!!.
அதுமுதல், அத்திருக்கோயில் நந்திகேசர் "புல்லுண்ட நந்தி" என அழைக்கப்படுகிறார்.
சப்த ஸ்தான யாத்திரை மஹிமை :
அது சமயம், பல சிவ தலங்களை தரிசித்த உறையூர் சோழ மன்னனுக்கு, கைலாயம் செல்ல வேண்டும் என்ற வேட்கை உண்டானது. அதற்கு, ஹரதத்தரைப் பணிந்து தன் விருப்பம் நிறைவேறும் வழி என்ன? என்று கேட்டார்.
அதற்கு ஹரதத்தர், மன்னனே! தாங்கள் முதலில் கஞ்சனூர் இறைவனை தரிசித்த பின், நடைப்பயணமாகவே அருகில் உள்ள திருக்கோடிகா, திருவாலங்காடு, திருவாவடுதுறை, திருக்குரங்காடுதுறை (ஆடுதுறை), திருமங்கலக்குடி மற்றும் திருமாந்துறை ஆகிய ஏழு திவ்ய சிவதல இறைவனை தரிசித்த பின், மீண்டும் இந்த கஞ்சனூர் இறைவன் அக்னீஸ்வரர் மற்றும் இறைவி கற்பகாம்பாளையும் தரிசித்து உங்களின் நடைபயண யாத்திரையை அரை ஜாமத்திற்குள் பூர்த்தி செய்தால் கைலாயம் அடையலாம் என்றார்.
உடன் மன்னனும் மகிழ்வோடு அடுத்த நாளே, தன் குதிரையின் மீதேறி, குடை பிடிக்கும் பணியாள் பின் தொடர, அரை ஜாமத்திற்குள் ஹரதத்தர் கூறியபடி தன் தல யாத்திரையை நிறைவு செய்யும் விதமாக கஞ்சனூரை அடைந்தார். அவர் வருகையை எதிர்பார்த்து ஹரதத்தரும் கோயில் வாசலில் காத்து இருந்தார்.
ஆனால் கோயில் வாசலை நெருங்கியதும், குதிரையும் குடை பிடித்த பணியாளும் மயங்கி சரியவும், சிவகணங்கள் வந்து, குதிரை மற்றும் பணியாள் அவர்களை மட்டும் கைலாயம் அழைத்துச் சென்றனர்.
ஏமாற்றம் அடைந்த மன்னன் திகைத்து நிற்க, நான் கால்நடைப்பயணமாக அல்லவா! உம்மை செல்லும்படி கூறினேன். நீங்கள் சொகுசாக அல்லவா சென்றீர்கள்! குதிரையும் வீரனும் கால்நடையாகச் சென்றதால் அவர்களுக்கு பலன் கிடைத்தது என விளக்கினார்.
மன்னனும் தன் தவறுணர்ந்து, மறுநாளே பாதயாத்திரையாக இந்த கஞ்சனூர் உள்ளிட்ட ஏழு தல யாத்திரையையும் பூர்த்தி செய்ய, அவ்வண்ணமே சிவ கணங்களால் கைலாய ப்ராப்தி ஈடேறப் பெற்றார்.
இவ்விதம் இன்னும் பலப்பல அற்புதங்களை நிகழ்த்திய ஹரதத்தர், சிவகைங்கரியங்கள் பல செய்து, தன் சாபம் நீங்கி வளர்பிறை பஞ்சமி திதியில் புஷ்பக விமானத்தில் 'கைலாயம்' சென்றடைந்தார்.
இன்றும், இத்திருக்கோயில்
அக்னீஸ்வரரின் திருவீதி உலாவில் ஹரதத்தரும் இடம் பெற்றிருப்பார்.




















































































































































































































