தன்வந்திரி ஜயந்தி.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 23 ஆம் தேதி 2022 "தன்வந்திரி ஜயந்தி'. "அனைவரும் அறிந்த பத்து அவதாரங்கள் தவிர, மஹாவிஷ்ணு உலக நலனுக்காக இன்னும் பல அவதாரங்கள் எடுத்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று உடல் ஆரோக்கியத்தை அருளும் தேவ மருத்துவராக வணங்கப்படும் "தன்வந்திரி" ஆவார்.
பாற்கடலை அமிர்தத்திற்காக கடையப்பட்ட பொழுது உண்டான பல அற்புத வஸ்துக்களில் கடைசியாக; பின்னிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும், இடது கையில் அட்டைப் பூச்சியும், வலக்கையில் அமிர்தகலசத்தை தாங்கியும் தோன்றியவர் இந்த 'தன்வந்திரி'
தனு என்ற சொல்லுக்கு உடலைத் தைத்தல் என்ற பொருளும் உண்டு. அறுவை சிகிச்சை செய்வதில் வல்லவர். அதனால் தன்வந்திரி காரணப்பெயர் ஆயிற்று. அத்துடன் பிரம்மா நான்கு வேதங்களின் சாரமாக ஐந்தாவதாக ஆயுர் வேதத்தை படைத்தார். அந்த ஆயுர்வேத மருத்துவத்திற்கு தன்வந்திரியே தலைவராகவும் கருதப்படுகிறார்.
பிரம்மா தான் உருவாக்கிய ஆயுர்வேதத்தை முதலில் சூரியதேவனுக்கு கற்பித்ததாகவும், தன்வ என்றால் வான்வெளி எனப் பொருள். 'ஆக , தன்வன்' என்ற சொல் வானத்தில் திரிபவன் எனும் பொருள் தருவதாலும், வானத்தில் அலைைந்து திரியும் சூரியனே அனைத்து ஜீவன்களின் வாழ்வாதாரம். அவனே தன் கிரணங்களால் அனைத்து உயிர்களையும் காப்பாற்றுபவனாக இருப்பதால் சூரிய தேவனே, ' தன்வந்திரி' என்றொரு மாற்றுக் கருத்தும் உண்டு.