Sunday, 20 February 2022

வாயு பகவான்

 





நாம் உயிர் வாழ மிகவும் இன்றியமையாத ஒன்று காற்று. வாழும் ஒவ்வொரு உயிரின் உடலிலும் வெளியிலும் எங்கும் வியாபித்திருக்கும் இத்தகைய காற்றின் அதிதேவதையாக "வாயு பகவானை" வழிபடுகிறோம்.




வாயு என்றால் வீசுபவன் எனப்பொருள்.  வாயு பகவான் ஆதிபகவானின் மூக்கிலிருந்து பிறந்தவர் என்றும் ருத்ரனின் புதல்வன், இந்திரனுக்குக் பணியாளனாகவும், அக்னி தேவனின் உற்ற நண்பனாகவும் விளங்குவதாக 'ரிக் வேதம்' உரைக்கின்றது.




வாயுவின் புதல்வர்களாக அனுமனும், பீமனும் என்பது அனைவரும் அறிந்ததே!. வாயு பகவானுக்கு காற்றின் வீச்சை பொருத்த அளவில் பலவித பெயர்கள் உள்ளன. 


        அந்த வகையில் 'மருத்' என்ற இவரது பெயர் விளக்கம் புயல் என்பதாகும் 

        "மருத் இல்லை எனில் மரணம்"

 என்ற வாசகமும் உண்டு. புயல் போன்ற வாக்கு, மனம், புத்தி என அனைத்திலும் வேகமாக செயல்படுபவர் என்ற காரணத்தினால் வாயு மைந்தனான  அனுமனுக்கு 'மாருதி' என்ற சிறப்புப் பெயரும் உண்டாயிற்று. அதுபோலவே அடாவடியான பலமும், வேகமும் கொண்டு திகழ்பவன் 'பீமன்' என்றால் தந்தையின் வீரியம் இவர்களிடத்தில் பிரதிபலித்ததல்லவா?!! 


அதிவேகமாக சஞ்சரித்துக் கொண்டிருப்பவர் ஆனதால் 'ஆசுக' என்றும் வேதம் போற்றுகிறது. இதன் அடிப்படையிலேயே, நினைத்த மாத்திரத்தில் வேகமாக கவிதைகளை   புனைபவர்களை " ஆசுகவி" என புகழ்கிறோம்.


இலங்கை உருவானதற்கு காரணம் 'வாயு பகவான்' என்று பாகவத புராணம்  கூறுகிறது. நாரதர் வேண்டிக் கொண்டதற்காக 'மேரு மலையின்' சிகரத்தை தன் பலத்த காற்றால் தகர்த்து கடலில் விழச்செய்தாராம். அப்படி உருவானதே இலங்கை.


நம் உடலில் பத்துவித காற்று சுழன்று நம் நித்திய வாழ்விற்கு உதவுகிறது. நாம் நித்தம் இறைவனுக்கு நிவேதனம் செய்து வணங்கும் பொழுது முக்கிய ஐந்து வகையான காற்றினைக் கூறி நீரினை விட்டு வழிபாடு செய்வோம் அல்லவா?! 

ஓம் ப்ராணாய  ஸ்வாஹா

ஓம் அபானாய  ஸ்வாஹா

ஓம் வ்யானாய ஸ்வாஹா 

ஓம் உதானாய ஸ்வாஹா

ஓம் ஸமானாய ஸ்வாஹா

ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா 

அதாவது,



ப்ராணன் - தொப்புளிலிருந்து மேல் நோக்கி நெஞ்சிலிருந்து வெளிவரும் காற்று.


அபானன் : தொப்புளிலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் காற்று. இதுவே வேண்டாதவற்றை வெளியேற்ற உதவுவது.


வியானன் : உடல் முழுவதும் பரவி இருக்கும் காற்று. உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் உதவி புரிவது.


உதானன் : வயிற்றிலிருந்து மேல் நோக்கியும் வெளியிலும் செல்லக் கூடியதான கழுத்தின் தொண்டைப் பகுதியில் நிலை பெற்றிருக்கும்.   இக்காற்றே, ஒரு ஜீவன் தன் உடலை விட்டு உயிர் பிரிவதற்கு உதவுவது. 


சமானன் : நாம் உண்ட உணவையும் நீரையும் சம அளவில் கலந்து தக்க முறையில் செரிமானம் செய்ய உதவுகிறது.


இது தவிர அந்த ஐந்து காற்றிற்க்கும் உதவியாளனாக ஐந்து உப காற்றுகள் நாகன், கூர்மன், கிருகலன்,  தேவதத்தன், தனஞ்செயன் என்பன.

நாகன்: இதன் மூலம் நிகழ்வது வாந்தி, ஏப்பம் மற்றும் கை கால்களை நீட்டி மடக்க உதவுவது

கூர்மன்: இந்த வாயு கண்ணிமைகளை மூடி திறப்பதற்கும், உரோமங்கள்  சிலிர்க்கவும் செய்கிறது. 

கிருகலன் : கோபம் மற்றும் தும்மலின் காரணகர்த்தாவாகிறது. 

தேவதத்தன் : கொட்டாவி, வியர்வை மற்றும் சோர்வை உண்டாக்கும் வாயுவாகும்.

தனஞ்செயன்: நம் உடலை வளர்க்க உதவும் வாயு. அதிலும் குறிப்பாக இறுதியில் நம் உடலை விட்டு பிராணவாயு நீங்கிய பின்னும் இவ்வாயு பிரியாமல் இருந்து இரத்தத்தை உறையச் செய்து உடலையும் வீங்கச் செய்து பின் கபாலத்தை பிளந்து வெளியில் செல்லும். க



ஞானிகள் தன் யோக நிஷ்டையின் மூலம் பிராணன் உடலை விட்டு நீங்குவதற்கு முன்பாக இந்த தனஞ்செய வாயுவை கபாலத்தை பிளந்து வெளியேற்றுவார்கள்.    இதன்மூலம் மறுபிறவி தவிர்க்கப்படும் என்பது நியதி. 


இப்படியாக நமது உடல் இந்த பத்துவித வாயுக்களால் செவ்வனே இயங்குகிறது. 


மஹாபாரதத்தில், ஏழு வகை காற்று பற்றிய குறிப்புகள் உள்ளன. உயிர் வாயு எனும் ஆக்ஸிஜன் ஆவாஹன் எனவும், வானத்தில் உள்ள நீரை தாங்கி நிற்கும் காற்றாக ' விவாஹன்" என்றும், மேகத்தை மழையாக மாற்றக் கூடிய குளிர் காற்று 'உத்வாஹன்' என்றும், மழை பொழிவதற்கு காரணனாக "ப்ரவாஹன்" ஆகவும், பாலைவன வறண்ட நிலப்பகுதி காற்றாக 'சம்வாஹன்' எனவும் சூரிய சந்திரன் இவற்றிலிருந்து வீசப்படும் கதிர்கள். அதாவது தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளின் படி மின்காந்தக் கதிர்கள் புற ஊதாக்கதிர்கள் இவற்றைத் தாங்கும் 'பரிவாஹன்' ஆகவும் செயல்படுகிறார் வாயு பகவான்.



அஷ்ட திக் பாலகர்களில் வாயு பகவான் வடமேற்கு திசையின் அதிபதியாக விளங்குகிறார். அத்துடன் காளஹஸ்தியில் வாயுலிங்கமாக இவரது சிறப்பு விளங்குகிறது. திருவண்ணாமலையிலும் அக்னியின் உற்ற தோழனாக இவரது தொடர்பு அறியப்படுகிறது. சுவாதி நக்ஷத்திரத்தின் அதிபதியாகவும் கருதப்படுகிறார் வாயு பகவான்.


 




Sunday, 6 February 2022

ரதசப்தமி 8.2.2022

 


தை மாதம் 26 ஆம் தேதி பிப்ரவரி 8ஆம் தேதி செவ்வாய் கிழமை  அன்று "ரதசப்தமி". அன்று நாம் எருக்கு இலையில் அரிசியும் பெண்கள் அத்துடன் மஞ்சள் வைத்தும் தலையின் மேல் வைத்து குளிக்கவேண்டும்.  பெற்றோர் இல்லாத ஆண்கள் அரிசியுடன் எள்ளும் கலந்து வைத்து ஸ்நானம் செய்வது விசேஷம். 

காஷ்யப முனிவருக்கும், அதிதிக்கும் மகனாக பிறந்தவர் சூரியதேவன். சிவபெருமானை நோக்கி கடும் தவம் இயற்றி கிரகங்களின் தலைவனாகவும், பூவுலகிற்கு ஒளி தந்து ரட்சிக்கும் கண்கண்ட தெய்வமாகவும் விளங்கக்கூடிய வரம் பெற்றும், சிவபெருமானின் வலக்கண்ணாகவும் " சிவசூரியன்" எனவும் சிறப்பு பெற்றார்.

அவ்வண்ணமே, மஹாவிஷ்ணுவின்  இடக் கண்ணாகவும், "சூரிய நாராயணர்" என்ற சிறப்பும் பெற்றார். 

ஒருமுறை ஜலந்தரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக தன் சக்கராயுதத்தை ஏவினார். அரக்கனை அழித்த சக்கராயுதம், காவிரியில் நீராடி மஹாவிஷ்ணுவை தியானித்துக் கொண்டிருந்த பிரம்மதேவனின் கரங்களை அடைந்தது. அகமகிழ்ந்த பிரம்மதேவன் சக்கராயுதத்தை, அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அச்சக்கராயுதம் கோடி சூர்ய பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. 

தன் ஒளியை காட்டிலும் மிகுந்து ஒளிரும் சக்கரத்தின் மேல் பொறாமை ஏற்பட, அதனை விட தான் ஒளி மிகுந்தவன் என நிரூபிக்கும் வண்ணம், கர்வத்துடன் தன்  சக்தியை மேம்படுத்தினார் சூரியதேவன். ஆயினும் சக்கராயுதம் சூரியனின் ஒளி அனைத்தையும் தன்னுள் இழுத்துக் கொண்டது. 

அதிர்ந்து தவறுணர்ந்த சூரியதேவன் மஹாவிஷ்ணுவை குறித்து தவமியற்றினார். தவத்தில் மகிழ்ந்த விஷ்ணுவும் சூரியனுக்கு, ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சக்கரம் கொண்ட தேரினை வழங்கினார். 



   உலகின் உறக்கத்தை களைத்து அசையும் சக்தியாக விளங்குவது "பத்மினி".



நோய்நொடியைக் களையும் அதிகாலை சக்தியாக விளங்குவது "உஷாதேவி"


சூரிய ஒளி மூலம் நாம் அனைத்து பொருட்களையும் உணரவைக்கும் சக்தியாக விளங்குவது "சம்ஞா தேவி".


வெளிச்சத்தால் தோன்றக்கூடிய நிழலின் சக்தியாக விளங்குவது "சாயாதேவி".



இப்படியாக சூரியதேவனின் ஒளிக்கற்றையின் வெவ்வேறு பரிமாணங்களாக சூரியனை விட்டு அகலாத சக்திகளாக விளங்குகின்றன.


கண்கண்ட தெய்வமாக திகழும் சூரியனை, சூரிய காயத்ரி, ஆதித்ய ஹ்ருதயம், சூரிய நமஸ்காரம் என தினமும் வழிபட ஆரோக்கியத்துடன் வளமான வாழ்வையும் அருள்வார். 


இந்த ரதஸப்தமி தினத்தில் தான் மஹாபாரத பீஷ்மரும் முக்தி அடைந்தார்.

தான் விரும்பும் நாளில் விரும்பும் வண்ணம் மரணம் சம்பவிக்கும் வரம் பெற்றவர் பீஷ்மர். ஆயினும் அந்திமக் காலத்தில் மிகுந்த நரக வேதனையடைந்தார், 



வியாச பகவானே, அவரிடம், ஒருவன் உடல், மனம் ,மொழி என இவற்றால் பிறருக்கு தீங்கு செய்யாமல் இருந்தாலும் , பிறர் செய்யும் தீமையை கண்டித்து தடுக்காமல் இருப்பதும் பாவமே !அனைத்து விதமான பலம் , அதிகாரப் பொறுப்புகளும் உனக்கு இருந்தும் திரௌபதியின் மானத்தைக் காக்க நீ முற்படாததால் தான் இத்தனை நரக  வேதனையடைகிறாய்.


 சூரிய தேவனே உன் பாபத்திற்கு விமோசனம் அளிப்பான். அதனால் சூரியனுக்கு பிரியமான எருக்க இலைகளை உன் உடல் முழுவதும் வைக்கிறேன். நீ அவரைப் பிரார்த்தித்து வணங்க, உன் உடல், மன வேதனை அகன்று முக்தியும் கிட்டும் என்றார். 



அதன் காரணமாகவே ரதசப்தமியன்று, எருக்க இலைகளை வைத்து குளிக்கும் வழக்கம் உண்டாயிற்று. 


கந்தர்வ பெண் சந்திரரேகை என்பவள், "கபிலமுனிவருக்கு" இன்னல் விளைவித்ததால் அவரால் சபிக்கப்பட்டு, அழகிய பெண்ணாக பூவுலகில் செந்தலை எனும் ஊரில் பிறந்து, அங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடலானாள். அவளது பக்தியில் மகிழ்ந்த இறைவனும் இதே ஸப்தமி திதியில் சந்திரரேகைக்கு "அர்த்தநாரீஸ்வரராக" காட்சியளித்து காவிரி தீர்த்தம் அளித்து சாபவிமோசனமும் வழங்கினார்.