Saturday 4 February 2023

தைப் பூசம். அனுமனுக்கு அருளிய முருகப்பெருமான்.

 




5.2.2023 ஞாயிற்றுக்கிழமை, தைப்பூசத் திரு நாள்.

மகர மாதம் எனப்படும் தை மாதத்தில், பௌர்ணமியும் பூச நக்ஷத்திரமும் கூடும் தினம் முருகனுக்கு உகந்த "தைப்பூச"த்  திரு நாளாகும்.
ஞானிகள், முனிவர்கள், தேவர்கள் தவிர அனைத்துக் கடவுளர்களும் கொண்டாடக்கூடிய ஒரு தெய்வம் யாரெனில், அது , 'குமரக்கடவுள்" தான்.
ஆம்! தமிழில் 
  "சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை,
  சுப்ரமணிய ஸ்வாமிக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை".
              என்று ஒரு பழமொழியே உண்டு. 
நம் தலைவிதியை எழுதும் பிரம்மனுக்கே பாடம் புகட்டியவன், தன் தந்தை ஈசனுக்கே 'ஞானோபதேசம்" செய்தவன், தாய்மாமன் ஆனதால் திருமாலின் மருமான் மட்டுமின்றி, வள்ளி, தெய்வானையை    மணந்ததால், திருமாலின் 'மருமகனாகவும் விளங்குபவன்.
ஆம்! அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற இரு பெண்கள் திருமாலின் ஆனந்தக் கண்ணீரிலிருந்து உதித்தவர்கள். அவர்களுக்கு தகுந்த மணாளன் முருகனே, என்றும், அதனால் அவர்கள் முருகனை மணமுடிக்கும் நோக்கத்தில் தவமிருந்தனர்.  
     தெய்வானை நியம நிஷ்டையுடன், தவமிருந்ததால், தேவேந்திரனின் மகளாக அடுத்தப் பிறவியில் பிறந்து, முருகப்பெருமானை கரம் பற்றினாள். ஆனால், வள்ளியோ, சிறிது விளையாட்டுத்தனத்துடன், நியம நிஷ்டைகளை  கடைபிடித்ததால், நம்பிராஜனின் வளர்ப்பு மகளாக அவதரித்து, பின் முருகப்பெருமானை கரம் பற்றினாள்.
       அதுமட்டுமின்றி, ராமாயணத்தில், ராமரையும் இலக்ஷ்மணனையும், தன் வேள்வியைக் காக்கும் பொருட்டு அழைத்துச் சென்ற விஸ்வாமித்திர மகரிஷி, தாடகை முதலான அசுரர்களின் வதத்திற்குப் பின்,  சீதை சுயம்வரத்தில் பங்கு கொள்ள அயோத்தி இளவரசர்களான ராமன் மற்றும் இளவலுடன் செல்லும் வழியில், அவர்களுக்கு பயணக் களைப்பு தெரியாமல் இருக்க, பல வம்சாவளிக்    கதைகளை  கூறியவாறே செல்கிறார். 
அப்படி கூறிய கதைகளில் குறிப்பிடத்தக்கது, திருமுருகனின் அவதாரக் கதையாகும்.  "குமாரோத்பத்தி :"  என்ற தலைப்பில், திருமுருகனின் கதையை, அயோத்தி இளவரசர்கள் இருவரும், விஸ்வாமித்திரர் கூற, மிகுந்த ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்ததாக, வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 37 ஆவது ஸர்க்கமாக இடம் பெற்றுள்ளது.
   அதைவிடவும், கோசலை, ராமனிடம் ஆபத்துக் காலத்தில், சுப்ரமணிய ஸ்வாமியை வேண்டிக் கொள்ள எந்தவொரு தீங்கும் உனை நெருங்காது என அறிவுறுத்துகிறாள்.  
போரில் ராமன் எய்த அம்பு, முருகப்பெருமானின், 'வேல்" போல பிரகாசித்ததாக வால்மீகி இரு இடங்களில் உவமைப்படுத்துகிறார்.
கீதையில் பகவான் கிருஷ்ணன், சேனைத் தலைவர்களில், தான் 'ஸ்கந்தன்' என்றே கூறுகிறார்.
  இப்படிப்பட்ட இந்த கந்தபெருமான் அனுமனுக்கும் அருள் புரிந்தார் என்றால் அது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?!! அப்படி அருள் புரிந்த தலம், நம் தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற, கோவை மாநகரம் என்றால், வியப்பின் உச்சிக்கே சென்று விடுவீர்கள் தானே!!. ஆம்! அது உண்மையே. 
    இலக்குவன் பொருட்டு, அனுமன், சஞ்சீவி மலையை தூக்கி வந்தார் அல்லவா? அது சமயம் வரும் வழியில், அவருக்கு தொண்டை வறண்டு தாகம் மேலிடுகிறது. உடன் கீழே ஒரு சிறு குன்றில் இறங்கி, நீர்ச்சுனை எதுவும் கண்களுக்குப் புலப்படாததால்,
'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்பதுணர்ந்து, முருகப்பெருமானை மனமுருக வேண்டுகிறார். திருமுருகனும், அவர்பால் அன்பு கொண்டு மனமிரங்கி, தன் வேலால் ஓரிடத்தில் குத்தவும், நீர் பீறிட்டுப் பாய்ந்தது. தாகம் தணிந்தவராய், மீண்டும் முருகனுக்கு  நன்றி கூறி வணங்கி விடைபெற்றதாக தல வரலாறு கூறுகிறது. 



வாவி என்றால் ஊற்று. நீர்ச்சுனை என்று பொருள். ஹனுமனுக்காக தோற்றுவிக்கப்பட்ட ஊற்று என்பதனால், அவ்விடம் "ஹனுவாவி" என்று அழைக்கப்பட்டது காலப்போக்கில் மருவி 'அனுவாவி' என்றாயிற்று. அனுமக்குமரன் மலை என்ற சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.
500 படிக்கட்டுகள் கொண்ட இந்த மலைக் கோயிலின்  முன்பாக 'இடும்பன் சன்னதி' உள்ளது. 


வினாயகர், முருகனின் படைத் தளபதியான வீரபாகுவும் இக்கோயிலில் வீற்றிருக்க, அனுமன் வடக்கு நோக்கி அருள் பாலித்த வண்ணம் விளங்குகிறார்.



திருமுருகனால் உருவான இந்த ஊற்று நீரையே அங்கு வாழ் மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த ஊற்றின் ஆரம்பம் எங்குள்ளது என்பது இன்று வரை  அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட  இயலவில்லை. தித்திப்பாக, குளிர்ந்து இருக்கும் அந்த தண்ணீர், முருகனின் அருள் போல் இன்றளவும் வற்றாமல் இருக்கிறது என்று வியந்து பெருமிதத்துடனும் கூறுகின்றனர் அப்பகுதி வாழ் மக்கள்.
அந்த மலையின், தென் பகுதி வழியாக ஏறி இறங்கினால் மருதமலையை அடைந்து விடலாமாம்!

1 comment:

  1. Super
    அப்பப்பா ! இதுவரை கேட்டிராத எத்தனை எத்தனை விஷயங்கள் !

    தைப்பூசத் திருநாள் அன்று தங்கள் மூலம் கீழ்க்கண்டவைகளை அறிகிறோம்

    நமக்கு யுக கணக்கெல்லாம் தெரியாது

    முருகன் முந்தி பிறந்தாரா ராமாயணம் முந்தி நடந்ததா - தெரியாது

    ஆனால் உங்கள் மூலம் முருகன் ராமபிரானுக்கு எல்லாம் மூத்தவர் என்று அறிய முடிகிறது.

    முருகன் எவ்வாறு திருமாலுக்கு மருமகன் என்பதை திருமாலின் கண்ணீரில் இருந்து உதித்த அமிர்தவல்லி சுந்தரவல்லி என்பவர்கள் தான் முருகனை மணம் முடிக்க வள்ளி தெய்வானையாக அவதரித்தார்கள் என்று தெரிந்து கொண்டோம்

    விசுவாமித்திரர் ராமலக்ஷ்மி அவர்களுக்கு கூறும் *குமாரோத்பத்தி* என்கிற முருகனின் அவதார கதையை கூறுகிறார் என்றும்

    இது ராமாயணத்தின் பாலகண்டத்தில் வால்மீகி 37 வது சர்க்கத்தில் சொல்கிறார் என்பதையும்

    ராமனின் அம்பு முருகப்பெருமானின் வேல் போல் இருப்பதாக இரண்டு இடங்களில் வால்மீகி கூறுவதையும்

    கீதையில் கிருஷ்ணன் சேனைத்தலைவர் ஸ்கந்தன் என்று கூறுவதையும்

    சஞ்சீவி மலையை கொண்டு வரும் பொழுது அனுமன் (தன் பெயரால் பின்னாட்களில் அழைக்கப்படும் ஹனுவாவி)
    குன்று பிரதேசத்தில் தன் தாகம் தணிக்க முருகப்பெரு மானை வேண்டிய பொழுது
    முருகப்பெருமான் தன் வேலால் நிலத்தில் குத்தி பெருகிய ஊற்றின் மூலம் அனுமன் தன் தாகத்தை தெரிவித்துக் கொள்வதாகவும்

    அந்த ஊற்றின் ஆரம்பம் எங்கு உள்ளது என்பதை இன்றளவும் அறிய முடியாமல் இருப்பது (அனைத்துக்கும் மிஞ்சிய தேவ ரகசியம் - இது என் கருத்து)

    அனுவாவி மருதமலையின் அருகில் இருப்பதும்

    இப்படி பல விஷயங்கள் தங்கள் மூலம் அறிய ஆனந்த கண்ணீராக பெருகுகிறது !

    உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது !

    - V. Sugavanam

    ReplyDelete