நாளைய தினம் மார்ச் 9 ம்தேதி திங்கட்கிழமையன்று காமதகனம் மற்றும் ஹோலி பண்டிகை.
காதல் தெய்வமாக கருதப்படும் காமதேவன் எனும் மன்மதன் மஹாவிஷ்ணு மற்றும் மஹாலக்ஷ்மியின் மகன் ஆவார். இவரது மனைவி ரதி தேவி இவரது வாஹனம் 'கிளி'. இவரது நண் பனாக விளங்குபவர் வசந்த காலத்தின் அதிபதியான 'வசந்தன் ஆவார். இவரது ஆயுதம் கரும்பு வில்லும், வெண்தாமரை, அசோக மலர், மல்லிகை, மாம்பூ மற்றும் நீலத் தாமரை என்ற ஐந்து வகையான மலர் அம்புகளையும் தாங்கியிருப்பார்.
உலக வாழ்வியலுக்கான தேவனாக விளங்கிய இவர், ஆழ்ந்த தவத்தில் இருக்கும் சிவனையும் பார்வதி தேவியையும் திருமண வாழ்க்கையில் ஈடுபடுத்துவதற்காக இந்திரனால் பணிக்கப்பட்டார். அப்பொறுப்பை சிரமேற்கொண்டு, சிவ யோகிக்கு பணிவிடை செய்ய பார்வதி வந்த சமயம் இவர் சிவன் மேல் மலரம்பை விட, முதலில் தடுமாறிய சிவபெருமான் பின் கோபங்கொண்டு காம தேவனை தன் நெற்றிக் கண்ணால் எரித்துவிட்டார்.
சாம்பலாகிப் போன தன் கணவனைக் கண்டுகதறிய ரதிக்காக மனமிறங்கி, அவள் கண்களுக்கு மட்டும் தெரியும் படியும் மற்றவர்கள் உணரும் வகையில் உருவமின்றி அருவமாக இருப்பான் எனவும் கூறினார்.
அத்துடன் மஹாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில், அவருக்கும் ருக்மினிக்கும் மகனாக "பிரத்யும்னன்" என்ற பெயருடன் இழந்த தன் தேகத்தை திரும்பப் பெறுவான் எனவும் சாப விமோசனம் அளித்தார்.
இப்படி சிவனால் எரிக்கப்பட்டு அருவமாக உயிர் பெற்றதையே "ஹோலி பண்டிகையாக" கொண்டாடுகின்றனர்.
No comments:
Post a Comment