Saturday 23 October 2021

ஸ்ரீரங்கம் டோளோத்ஸவம்

 அக்டோ. 24 ஞாயிற்றுக்கிழமை இன்றைய தினம் ஸ்ரீரங்கம் டோளோற்சவம் துவங்க இருக்கிறது. டோளா என்றால் ஊஞ்சல். 

சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இன்றி ஊஞ்சல் ஆடுவதில் மிகுந்த விருப்பம் கொள்வர். மனம் உடல் ஆரோக்கியத்தை தரவல்ல இந்த ஊஞ்சல் விளையாட்டில் எம்பெருமான் தாயாருடனும் ஆண்டாள் நாச்சியார் மற்றும் துளுக்க நாச்சியாருடன் எழுந்தருளி ஊஞ்சல் சேவை சாதிக்கும் நேரத்தில் மனமகிழ்வுடன் இருப்பார்கள். 
   இந்த ஊஞ்சல் சேவையை நாம் கண்குளிர தரிசிக்க நம் மனமும் இலகுவாகி மனமுருகி வேண்டுவதை ஸ்ரீரங்கனும் நிறைவேற்றி அருள் புரிவார் என்பது நம்பிக்கை. 
image.png
இத்தகைய திரு நாளில், திருவரங்கன் இங்கே எழுந்தருளிய சரிதத்தை அறிவோம்!!
    வைகுண்டத்தில் பிரம்மன் மஹாவிஷ்ணுவிடமிருந்து பள்ளிகொண்ட பெருமானது விக்ரகத்தை பெற்று, தான்  பூஜித்து வந்ததை சூரிய பகவானுக்கு அளிக்க, சூரியதேவன் வழிபட்டதோடு அவரது  குல வழித் தோன்றல்களாலும் பரம்பரையாக பூஜிக்கப்பட்டு, கடைசியாக  ராமபிரானும் அயோத்தியில் நித்தியம் வழிபட்டு வந்தார்
image.png
ராவணனிடம் இருந்து சீதையை மீட்பதில் விபீஷணன் பங்கு அளவிட முடியாதது. அதனால் ராமர், தன் நன்றியை தெரிவிக்கும் விதமாக தனது பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்ட விபீஷணணுக்கு தான் பூஜித்து வந்த பள்ளிகொண்ட பெருமானான ஸ்ரீமன் நாராயணனின் விக்ரகத்தை பரிசாக அளித்தார்.
image.pngimage.png
மிகுந்த மனமகிழ்வுடன் விபீஷணன் அதை  பெற்றுக் கொண்டு இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் சூரிய வழிபாடான "சந்தியாவந்தனம்" செய்யும் காலம் நெருங்கியது. இலங்கைக்கு இந்த விக்ரகம் சென்றுவிட்டால் மீண்டும் அசுரர்களின் ஆதிக்கம் ஓங்கி விடும் என அஞ்சிய தேவர்கள், விநாயகரின் உதவியை நாட அவரும் அவர்கள் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, அங்கே ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் போல் விபீஷணன் பார்வையில் படும்படி நின்று கொண்டிருந்தார். காவிரிக் கரையோரம் இடைச்சிறுவனைக் கண்டு மனம் நிம்மதி அடைந்த விபீஷணன் அச்சிறுவனிடம், எனது இச்சிறு விக்ரகத்தை தரையில் வைக்காமல் கையில் வைத்துக் கொண்டிரு! நான் விரைந்து எனது நித்ய கடனை முடித்து வருகிறேன் என  வேண்டிச் சென்றார். 
 ஆனால், விபீஷ்ணன் காலம் தாழ்த்தியதால்,  விநாயகர் கையில் வைத்திருந்த சிலையை அவ்விடத்திலேயே வைத்து விட்டு மறைந்தார்.
image.png
தனது நித்ய கடமையை முடித்து வந்த விபீஷ்ணன், சிறுவனைக் காணாமலும், தன் விக்ரகம் தரையில் வைக்கப்பட்டிருந்ததோடு, பெரிய அளவில் உருமாறியும் இருந்தது கண்டு அதிர்ந்தான். எப்படியாகிலும் அதைப் பெயர்த்து எடுத்து இலங்கைக்குக் கொண்டு செல்லும் உறுதியுடன் அச்சிலையை பெயர்த்து எடுக்க முற்பட்டான்.
image.png
அங்கு நடந்ததை கேள்வியுற்ற, அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்த 'தர்மவர்ம சோழன்'  அங்கே விரைந்து வந்து விபீஷணனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றி சமாதானம் செய்தான். அச்சமயம் 'அசரீரியாக' எம்பெருமான், தான் இவ்விடத்திலேயே கோயில் கொள்ள விரும்புவதாகவும், ஆயினும் இலங்கையைப் பார்த்தவண்ணம் தெற்கு நோக்கியே வீற்றிருப்பதாகவும் வாக்களித்தார். வேறு எந்த வைணவத் தலங்களும் இல்லாத வகையில் ஸ்ரீரங்கம் மட்டும் தெற்கு திசை நோக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. வைகுண்டத்திலிருந்து நேரிடையாக பூமிக்கு வந்த சிலையாதலால், இத்தலம் "பூலோக வைகுண்டம்" என போற்றப்படுகிறது.
      அதன்பின், தர்மவர்ம சோழன் எம்பெருமானுக்கு கோயில் எழுப்பினான். அரங்கம் என்றால் தீவு என்றொரு பொருளும் உண்டு. காவிரி சூழ நடுவே பள்ளி கொண்டதனால், "திருவரங்கம்" என போற்றப்பட்டது.  
 பின்னாளில் காவிரியில் பெருவெள்ளம் ஏற்பட , இத்திருக்கோயில் ஆற்று மணலில் புதையுண்டது. தர்மவர்ம சோழனின் வழிவந்த  சோழ மன்னன் ஒருவன், இந்த ஆலயத்தை மீட்கும் பணியில் ஆவலோடு ஈடுபட்டான். புதைந்த இடத்தை அறியமுடியாமல் பல நாட்களான அவனது முயற்சியில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் 'கிளி' ஒன்று வேத மந்திரங்களை இசைப்பதைக் கேட்டு, திருவரங்கன் பூஜை காலத்தில், வேதியர் ஓதும் மந்திரங்களை தினமும் கேட்டதனால் இக்கிளியும் அதை ஓதுகிறது என யூகித்து, குறிப்பால் திருவரங்கன்  மணலில் புதையுண்டிருக்கும் இடத்தை உணர்ந்த மன்னன், சீரமைத்துக் கட்டியதனால், "கிளிவளவச் சோழன்' என போற்றப்பட்டான். அதன்பின் வந்த பாண்டிய, விஜய நகரப் பேரரசுகள் சார்ந்த அரசர்கள் இக்கோயிலை மேலும் புதுப்பித்துள்ளனர். உலகளவில் இரண்டாவது பெரிய வைணவக்  கோயில் என்ற பெருமையும் கொண்டது ஸ்ரீரங்கம்.
டில்லி சுல்தான் ஒருமுறை தமிழகத்தின் மீது படையெடுத்து செல்வங்களை எல்லாம் சூறையாடிச் சென்றதில் ஸ்ரீரங்க நாதர் சிலையும் அடங்கும். அச்சிலையை சுல்தான் தன் மகளிடம் அளிக்க, அச்சிலையின் அழகில் மயங்கியதோடு, எம்பெருமானின் பெருமைகளை அறிந்து அவரையே தனது மணவாளனாக வரித்தாள். ஸ்ரீரங்க நாதர் சுல்தானிடம் இருக்கும் செய்தியை அறிந்து குழுவாகச் சென்று, ஆடிப்பாடி சுல்தானை மகிழ்வித்து, எங்களது ரங்க நாதரை திருப்பித் த்ருமாறு வேண்டினர். அவரும் அவ்வண்ணமே தருவதாகக் கூறி, தன் மகளிடம் இருந்த சிலையை வலுக்கட்டாயமாக வாங்கி அவர்களிடம் ஒப்படைத்தார். 
image.pngimage.png
       ரங்க நாதரின் பிரிவைத் தாளாமல் டில்லி சுல்தான் இளவரசி 'சுரபானி' ஸ்ரீ ரங்கம் கோயிலை வந்தடைந்தாள். அவளது வருகை அனைவரையும் கலக்கமுறச் செய்தது. ஆம்! ஸ்ரீரங்கனை இங்கிருந்து எடுத்துச் செல்லவே வந்திருக்கிறாள் என நினைத்தனர்.  அதனால் ஸ்ரீரங்கனை மறைத்து வைத்தனர். ஸ்ரீரங்கனை காணமுடியாமல் அவ்விடத்திலேயே எம்பெருமானுடன் ஐக்கியமானாள். அப்பொழுது தான் உண்மை உணர்ந்து பட்டர்கள் முதல் பக்தர்கள் அனைவரும் தங்கள் செயலால் மனம் வருந்தினர்.
      ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஸ்ரீவில்லிப்புத்துர் கோதை நாச்சியார், திருவரங்கனையே மணாளனாக வரித்து அவருடன் ஐக்கியமானது போல், டில்லி சுல்தானின் மகள் ஸ்ரீரங்கனின் மேல் அளவில்லாத பக்தியுடன், தரிசிக்க வந்து,  தன் இன்னுடல் நீத்து, ஸ்ரீரங்கனுடன் ஐக்கியமானாள். அதனால், சுல்தான் இளவரசி 'துளுக்க நாச்சியார்' என வழிபடப்படுகிறாள்.
       இரண்டாவது பிராகாரத்தில் இடம் பெற்றிருக்கும் துலுக்க நாச்சியாரின் ஓவியமே வரையப்பட்டிருக்கும். இஸ்லாமிய வழக்கப்படி சிலை வழிபாடு இல்லாத காரணத்தால், சன்னதியில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

Saturday 16 October 2021

ஐப்பசி துலா ஸ்நானம் மற்றும் அன்னாபிஷேகம்.

                   துலா ஸ்நானம் 2021

  • அக்டோபர் 18 ந்தேதி திங்கட்கிழமை  ஐப்பசி எனும் துலாம் மாதம் துவங்க இருக்கிறது.தராசு முள் போல் இரவும் பகலும் சமமாகக்  கொண்ட மாதமானதால் 'துலாம் மாதம்' என போற்றப்படுகிறது. [துலாம் - தராசு] 
ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராடுவது பாபத்தை போக்கி புண்ணியத்தை  அருளுவதாகும். 
ஏனெனில், கங்கை யமுனை சரஸ்வதி போன்ற இன்னபிற புனித நதிகள் கூட இந்த மாதத்தில்  காவிரியில் புனித நீராடுவதாக ஐதீகம். 
ஒருமுறை கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் தங்களின் மேல் கறை படிந்து தங்கள் உடல் கருப்பாக மாறியதைக் குறித்து பிரம்மதேவனிடம் மனக் குறையை வெளிப்படுத்தினர். அதற்கு பிரம்மா, மக்கள் தங்கள் பாவத்தை போக்கிக் கொள்ள, புனித நீராடுவதன் விளைவே அப்பாவச் சுமைகள் கறை போல் உங்கள் மேல் படிந்துள்ளன. 
இப்பாவச் சுமையைப் போக்க, நீங்கள் துலா மாதத்தில் காவிரியில் புனித நீராடுங்கள் எனக் கூறியதன் பேரில், காவிரியில் நீராடி  தங்கள்  மேல் படிந்த  பாவக் கறைகளை போக்கிக் கொண்டனர். அதனால் காவிரி பாயும் அனைத்து தலங்களிலும்  நீராடுவதன் மூலம் கங்கை முதல் அனைத்து நதிகளிலும்  நீராடிய பலன் கிட்டும் என்பதே  இதன் கூடுதல் சிறப்பு.
ஆயினும், காவிரி துலா ஸ்நானத்திற்கு சிவாலயங்களில் சிறந்ததான மயிலாடுதுறையும், விஷ்ணு ஆலயங்களில் சிறந்ததான ஸ்ரீரங்கமும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. 
  ஒருமுறை, சிவபெருமான் பார்வதி தேவிக்கு வேத சாரத்தினை எடுத்து உரைத்தார். அச்சமயம், கவனம் சிதறி ஆங்கே நந்தவனத்தில், உலவிக் கொண்டிருந்த, மயிலின் அழகில் மனம் லயித்து இருந்தாள் அன்னை பார்வதிதேவி. இதனைக் கண்ட சிவனார், மயிலாகப் பிறக்கக் கட்டளையிட்டார். 
 உடன் மயிலாக மாறிய அன்னை, பூவுலகின் இத்திருத் தலத்திற்கு வந்து சிவபூஜையில் ஈடுபட்டார். அன்னையின் பிரிவைத் தாளாத இறைவனும்,  ரிஷப வாஹனத்தில் இத்தலத்தை நோக்கி பயணித்தார். இது கண்ட மற்ற தேவாதி தேவர்களும் தம்தமது வாஹனத்தில் ஐயனைப் பின் தொடர்ந்தனர். 
    அப்பொழுது நந்திதேவர் கர்வத்துடன் அனைவரை விடவும் அதிவேகமாக   விரைந்து இத்தல காவிரி  நதியின் நடுவே வந்து இறங்கினார். அவரது கர்வத்தை அடக்க எண்ணிய ஈசன், நந்தியை பாதாள உலகத்தில் அழுத்தி விட்டார். தவறுணர்ந்த நந்தி மன்னிப்பு வேண்டவே, அத்தலத்தில் இருந்து காவிரியில் நீராடும் பக்தர்களுக்கு அருள் புரியும்படி கூறி மறைந்தார்.
image.png
    மயில் வடிவில் தன்னை பூஜிக்கும் அன்னையின் பொருட்டு தானும் மயில் உருக் கொண்டு  'மயூர தாண்டவம்" ஆடி அன்னையை மகிழ்வித்து கரம் பற்றினார் ஈசன். மயில் பூஜித்த தலம் ஆதலால் 'மயிலாடுதுறை' எனவும் இறைவன் மயூர நாதன்' எனவும் அழைக்கப்படலாயினர். 
image.png
       அவ்வண்ணமே  விஷ்ணுவின் திவ்யத்  தலமான  ஸ்ரீரங்க நாதருக்கு, இந்த ஐப்பசி மாதத்தில் மட்டும் துலா ஸ்நானமாக   காவிரியில்   இருந்தே  தீர்த்தம் எடுத்து மேள தாளத்துடன் யானை மீதேற்றி  வேத கோஷங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் மட்டும் காவிரி நீர் எடுத்து வரும் குடம் முதல் குடை சாமரம், ஸ்ரீரங்கனை அலங்கரிக்கும் ஆபரணங்கள் வரை அனைத்துமே தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 
image.png
image.png
  
                       
                          அன்னாபிஷேகம்

அடுத்து, அக்டோ. 20. 2021புதன் கிழமையன்று ஐப்பசி மாத பௌர்ணமி திதியில் விசேஷமான 'மஹா அன்னாபிஷேகம்". 
பஞ்ச பூதங்களான நிலம், நீர் , நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் இவற்றால் ஆனது இவ்வுலகம். அவ்விதமே நாம் உண்ணும் உணவும் பஞ்சபூதங்களின் கூட்டமைப்பே.  அதனால் ஒரு பருக்கை சாதத்தை கூட நாம் வீணடிக்கக் கூடாது என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. உலகின் அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் எம்பெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக நீர், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் மற்றும் வாசனா திரவியங்களால் அபிஷேகம் செய்தபின், கடைசியாக ஈசன் திருமேனியில் பக்குவமாகச் சமைத்த அன்னத்தை சாற்றுகிறார்கள். 
image.png
"சோறு கண்ட இடமே சொர்க்கம் "  என்ற பழமொழியினை கேட்டிருப்பீர்கள். அதாவது, இவ்விதம் அன்னாபிஷேகம் செய்த லிங்கத் திருமேனியைக் 
காண்போருக்கு சொர்க்கம் கிட்டும்   என்பதே இதன் பொருள். 

Saturday 9 October 2021

பெருமாளுக்கே நிபந்தனை விதித்த மேதாவி முனிவர்.

 


அக்டோ. 10ந்தேதி ஞாயிற்றுக் கிழமை இன்றைய தினம், பாதூர் கருட சேவை. கும்பகோணம் திருவாரூர் வழிப்பாதையில் அமைந்துள்ள வைணவ்த் தலமான 'நாச்சியார் கோயில்". இங்கு தாயாருக்கே அபிஷேக ஆராதனைகள் என அனைத்திலும் முதலிடம். ஏன் தெரியுமா? திருநறையூர் என்ற புராணப் பெயர் கொண்ட இத்தலம் 'நாச்சியார் கோயில்" என சிறப்புப் பெற்றதும் மேதாவி மஹரிஷி போட்ட நிபந்தனையே  காரணம்.

சுவாரஸ்யமான இக்கதையை அறிவோம் வாருங்கள்.
கடுந்தவங்கள் மூலம் ஞான நிலையை அடைந்து சதாசர்வகாலமும் பெருமாளையே துதித்த வண்ணம் இருந்த 'மேதாவி' எனும் மஹரிஷிக்கு, பெருமாளே தனக்கு மருமகனாக வந்தால் அது தனது பெரும் பாக்கியமாக இருக்கும் அல்லவா? என்ற ஆசை திடீரென உதித்தது.  . 
மகளே இல்லாத அவருக்கு மருமகன் எப்படி வருவார்? ஆயினும், அவரது ஆசையைப் பூர்த்திசெய்ய திருவுள்ளம் கொண்டார் எம்பெருமான். மஹாலக்ஷ்மி தாயாரும் எம்பெருமானின் திருவுளப்படி, மேதாவி மஹரிஷியின் நந்தவனத்தில் அழகிய பெண்குழந்தையாக, 'வஞ்சுள மரத்தடியில்' அவதரித்தாள்.
   வஞ்சுள மரத்தடியில் அக்குழந்தையைக் கண்டெடுத்த மஹரிஷி அகமகிழ்ந்து, 'வஞ்சுளவல்லி'என பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.

     வஞ்சுள வல்லி பருவ வயதை அடைந்ததும்,  இதற்காகவே காத்திருந்தது போல் கருடாழ்வார், திரு நறையூரில் தாயார் வஞ்சுளவல்லியுடன் எம்பெருமானை சேர்த்து வைக்கும் வேட்கையுடன் தாயாரது லாவண்யம், அழகு அறிவு, பெருமை இன்னபிறவற்றையெல்லாம் பெருமானிடம் எடுத்துக் கூறி, தாயாரின் வருகையினாலேயே வைகுண்டமும் பொலிவு பெறும் என்று மஹாவிஷ்ணுவை தன் மேல் ஏற்றிக் கொண்டு அழைத்து வந்தார். 

 மஹாவிஷ்ணுவும், அந்தணராக  உருமாறி, மேதாவி மஹரிஷியின்   வீட்டிற்கு விருந்தாளியாக வந்தார்.விருந்தினர் யாராக இருந்தாலும் அவர்களை தக்க முறையில் கவனித்து மகிழ்விப்பது நமது தலையாய கடைமையல்லவா?. அதனால், வீடு தேடி வந்த அந்தணரை உபசரித்து அமுது படைத்தார் மஹரிஷி. அப்பொழுது, விருந்தினர் உணவு உண்ட பின், கைகளை அலம்புவதற்கு உண்டான இடத்தைக் காட்டி உதவி புரிய அவருக்கு நீர் எடுத்துத் தர தன் மகளைப் பணித்தார்.  அதுசமயம், விஞ்சுளவல்லியின் கரத்தைப் பற்றினார் அந்தணர்.
    இதைக் கண்டு அடாத செயலைச் செயுத அந்தணருக்கு சாபம் கொடுக்க கோபத்துடன் நிமிர்ந்தார் மஹரிஷி. உடன் அந்தணரும் மஹாவிஷ்ணுவாக காட்சியளித்து, தனக்கு அவரது மகளை திருமணம் செய்து தர வேண்டினார். இதனால், மிகவும் மனம் மகிழ்ந்தாலும், 
என்னதான்   தனது உற்ற தெய்வம் ஆனாலும், ஒவ்வொரு தந்தைக்கும்  தன் மகளிடத்தில் உள்ள வாஞ்சையை ஆங்கே அவரும் நிரூபித்தார்.
எம்பெருமானிடத்தில், ஒரு நிபந்தனை!  அனைத்திலும் என் மகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்றும், அத்துடன் இத்தலம், தன் மகளின் பெயரால் " நாச்சியார் கோயில்" என அழைக்கப்பட வேண்டும் என்ற அவரது நிபந்தனையை எம்பெருமானும் ஏற்றுக் கொண்டு, தாயாரை மணந்து கொண்டார். அதுமுதல் இத்திருத் தலம் "நாச்சியார்  கோயில்" என அழைக்கப்படலாயிற்று..     
   இன்றளவிலும் விழாக்காலங்களில் ஊர்வலத்தின் பொழுது, தாயார் திவ்ய அலங்காரத்துடன் இடுப்பில் 'சாவிக் கொத்து' சொருகப்பட்ட நிலையில், அன்னப் பட்சி வாஹனத்தில் முன்னே செல்ல, எம்பெருமான் கருட வாஹனத்தில் பின் தொடருவார். 
   இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், கல்கருட வாஹனத்தை  முதலில் நால்வர் மட்டுமே சுமந்து வரும் நிலையில், அடுத்தடுத்த தூரம் கடந்தபின், சிறிது சிறிதாக பாரம் கூடி எண்மர், பதினாறு, 32 , 64 மற்றும் 128 பேர் என  ஆட்களின் எண்ணிக்கை படிப்படியாக கூடிக் கொண்டே போகும். வீதிஉலா நிறைவு பெற்று, திரும்பவும் நிலைக்கு வரவர. அதே கிரமப்படி ஆட்களின் எண்ணிக்கை குறைந்து சன்னதி அடையும் பொழுது  நால்வராக  முடியும் அதிசயம் இன்றளவிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 
   இதுவும் கருடனது ஆழ்ந்த பக்தியை விளக்குவதாகவே உள்ளது. ஆம்! அன்னப் பறவையால் கருடனது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாதல்லவா?. தாயாரைப் பின் தொடர்ந்து தானே எம்பெருமான் செல்வதாக கொடுத்த வாக்கு தவறிவிட்டால்  என்னவாகும்? என்ற எண்ணத்தில், கருடாழ்வார், முதலில் இலகுவாக நால்வர் மட்டுமே தூக்கிச் செல்லச் செல்ல, பின் எடை அதிகரித்து பாரம் தாங்க முடியாமல் ஆட்களின் எண்ணிக்கையை கூட்டி, மெதுவாக செல்லும்படியாக தன்னை ஆக்கிக் கொண்டார். 
     இவரது, ஆழ்ந்த இத்தகைய பக்தியின் காரணமாகவே, வேறு எங்கும் காண இயலாத வகையில், கருடனுக்கு தனி சன்னதி மூலஸ்தானத்திற்க்குக் கீழே அமைக்கப்பட்டுள்ளது. பெருமாளுக்கு 'திருவாராதனம்' சமர்ப்பித்த பின் இந்த கல்கருடனுக்கும்   ஆராதனம் நடக்கும்.

Saturday 2 October 2021

கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி.

 அக்டோபர் 5 தேதி செவ்வாயன்று  மிகவும் விசேஷமான    "கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி".

புரட்டாசி பௌர்ணமியை அடுத்த பிரதமை முதல் அமாவாசை வரையிலான 15 நாட்கள் கிருஷ்ண பக்ஷம் மஹாளயமாக முன்னோர்களின் வழிபாட்டிற்க்கான நாட்களாக உள்ளன என்பது அறிந்ததே!. 
  அனைத்து நாட்களும் சிறப்பானது தான் என்றாலும், சில நாள் திதி கிழமை போன்ற கூட்டமைப்பு, அதிக நற்பலன்களைத் தருவதாக விளங்கும். அதிலும் சதுர்த்தசி திதி, சஸ்திர ஹத பிதுரு திதியாக உள்ளது. அதாவது, போரில் வீரமரணம், துர்மரணம், அகால மரணம் போன்ற இன்னபிற காரணங்களால், பெண் சாபம் போன்றவை வழிவழியாக, தலைமுறையாகத் தொடர்ந்து தீராத பிரச்னையாக இருக்கும். 
அத்தகைய பிரச்னைகளுக்கு, இந்த மஹாளய சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் செய்ய, தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
 அதிலும் அந்த சதுர்த்தசி திதி செவ்வாய்க்கிழமையில் அமைந்து வந்தால் கூடுதல் பலனாக அமைவது கண்கூடு. அந்த நாளை, "கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி" என சிறப்பிக்கப்படுகிறது. [கிருஷண என்றால் தேய்பிறை. அங்காரகன் செவ்வாயைக் குறிக்கும். சதுர்த்தசி 14 ஆம் நாள்.]    
image.png
  அங்காரகன் உடல், அணிந்திருக்கும் மாலை, ஆடை என அனைத்துமே  சிகப்பு நிறமாக உள்ளன. அதனால் "செவ்வாய்" என அழைக்கப்படுகிறார். பொதுவாக, செவ்வாய் கிழமையை   அனைவரும் சுப காரியத்திற்கு ஒதுக்கி வைப்பார்கள். உண்மையில் நவகிரகங்களில் தன்னை அண்டியவர்களுக்கு உடனடியாக பலன் வழங்குபவர் அங்காரகன் மட்டுமே. செவ்வாய் கிரக தெய்வம் முருகப் பெருமான் ஆவார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாயன்று முருகனையும், அங்காரகனையும் ஒருசேர வழிபட  செவ்வாய் தோஷ வீரியம் குறையும் திருமணத் தடங்கல்களும் விலகும் என்பது ஐதீகம்.
image.png
   இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இவர் சிவபெருமானின் மகனாவார். ஆம்! 
  அந்தகாசுரன் எனும் அசுரன் சிறந்த சிவபக்தன். சிவனாரிடம் தன் குருதி நிலத்தில் விழுந்தால், அதிலிருந்து பல்லயிரக்கணக்கான வீரர்கள் தோன்றும்படியான வரம் பெற்றிருந்தான். தன் பக்தன் ஆனாலும், தான் அளித்த வரத்தின் துணையினால், எளியோரைத்  துன்புறுத்துவதை சகியாத எம்பெருமான், அவனுடன் தானே போரிடலானார். போரின் முடிவில், சிவபெருமானது நெற்றிக் கண்ணிலிருந்து நீர் வழிந்து பூமியில் விழுந்து. அதிலிருந்து மங்களன் தோன்றினான். இதனால் பூமி இரண்டாக பிளவுபட்டு, அந்தகாசுரனின் இரத்தம் பூமியில் விழாவண்ணம் தன்னகத்தே கொண்டதனால் சிகப்பு நிறத்தவனாக விளங்கினான். 
பூமா தேவியால் வளர்க்கப்பட்டதனால் "பூமிகாரகன்" எனவும் போற்றப்படுகிறார். வளர்ந்த பின், சிவபிரானைக் குறித்து தவம் செய்து நவகிரக அந்தஸ்தும் பெற்றார். 
இதனால்,  பொதுவாக மகாவீரர்கள், சர்வாதிகாரம் கொண்டவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என ஜோதிடம் கூறுகிறது.
image.png

பூமியின் வளர்ப்பு மைந்தன் ஆதலால், வீடு, நிலம் ,மனை யோகத்தினையும் அருள்பவர் ஆகிறார்.