வருகிற ஆகஸ்ட் 3 ஆம்தேதி செவ்வாயன்று "ஆடி பதினெட்டாம் பெருக்கு". பொங்கிப் பிரவகித்து பெருகி விரிந்து தான் ஓடும் பாதையையெல்லாம் வளப்படுத்திச்
யார் இந்த காவிரி? காவிரி அன்னை வரலாற்றை அறிவோம் வாருங்கள்!.
தமிழ் காக்கும் அருந்தொண்டாற்றிய 'குறுமுனியாம்' அகத்திய முனிவரின் தர்ம பத்தினியே 'லோபாமுத்ரா'. உலகை சம நிலைப்படுத்தப்படுவதற்காக இறைவனார் சிவபெருமானால் தென் மண்டலப் பகுதிக்கு அனுப்பப்பட்டார் அகத்திய முனிவர். அதற்கு முன் தமிழ் மக்களுடன் கலந்து வாழவேண்டிய அவசியத்தால், தென் மொழியான தமிழ் மொழியை இறைவனாரிடம் கற்றுக் கொண்டார். இதற்கான ஆதாரக் குறிப்பு, ஸ்கந்த புராணம், வால்மீகி ராமாயணம் கூறுகின்றது.
தம்பதியாக இவர்கள் இருவருமாக தமிழ் மொழிக்காக அரும் பணியாற்றியுள்ளனர். அகத்திய முனி லோபமுத்ராவைக் கரம் பிடித்த கதை சுவாரஸ்யமானது.
இந்த லோபமுத்ரா தேவி நான்கு வேதங்களில் முதலாவதான ருக் வேத காலத்திய 27 பிரம்மசாரிணிகளில் [அதாவது பெண் ரிஷி] ஒருவர் ஆவார். லோபமுத்ரா என்றால் உலகின் மொத்த அழகின் இருப்பிடமானவள் எனப் பொருள். தேவியின் லலிதா சஹஸ்ர நாமத்தை தேவியிடமிருந்தே நேரிடையாக உபதேசம் பெற்றவர்.
நான்கு வேதங்களில் முதன்மையான 'ரிக்' வேதத்தில் லோபாமுத்ரா இயற்றிய ஸ்லோகங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தனை பெருமை வாய்ந்த லோபமுத்ரா பிரம்மகிரி மலையில், இடையூறுகள் ஏற்படாதிருக்கும் பொருட்டு, பாறையாக மாறி தவமியற்றிக் கொண்டிருந்தாள்.
இதற்கிடையே 'சுர்வதமன்' எனும் அரக்கன், சிவபெருமானைக் குறித்து தவமியற்றி பெற்ற வரத்தின் பயனால், உலகையே ஆட்டிப் படைக்க நினைத்தான். அதன் முதல் படியாக, தேவலோகம் சென்று தேவர்களை வென்று சிறைபிடித்தான் ஆயினும், இந்திரன் மட்டும் தப்பி தென் பகுதியில் தஞ்சம் அடைந்தான். இதைத் தன் தளபதியின் மூலம் அறிந்த அசுரன், வருணனிடம் தென் பகுதியில் மழை பொழியாமல் 'பஞ்சம்' ஏற்படச் செய்யவேண்டும் என கட்டளையிட்டு அச்சுறுத்தினான்.
இந்திரனுக்கு உதவிய தென் பகுதி மக்களுக்கு தண்டனையாகவும், பஞ்சம் காரணமாக இந்திரன் தானே வெளியில் வரும் சூழல் உருவாகும் என்ற எண்ணம்.
இதனால் தென் பகுதி மக்கள் கடும் பஞ்சத்தினால் அவதியுறுவதைக் கண்டு வருந்தினாள் பாறை உருவில் இருந்த அன்னை லோபாமுத்ரா. இதற்கு தீர்வு காண அன்னையின் மனம் துடித்தது.
அச்சமயம் 'காவேரன்' எனும் விதர்ப்ப நாட்டு மன்னன் பிரம்மதேவனிடம், குழந்தை வரம் வேண்ட, நீ எந்த அழகிய பொருளைத் தொடுகிறாயோ, அதுவே உனக்கு மகவாக அமையும் என்றார். வரம் பெற்ற மன்னன் தன் நாடு திரும்பும் வழியில் கரடு முரடான மலைப் பாதையில் ஓரிடத்தில் கால் இடறி விழ இருந்தவர், உடன், அருகில் தவம் செய்து கொண்டிருக்கும் 'லோபாமுத்ரா' பாறையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார். உடன் லோபாமுதரா அழகிய பெண் குழந்தையாக, அவருக்குக் கிடைக்கப் பெற்றாள். மிகவும் மகிழ்ந்த காவேர மன்னன், குழந்தைக்கு 'காவேரி' எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்.
பருவ வயதை அடைந்ததும், அகத்திய முனிவர், ஏற்கெனவே லோபமுத்ராவின் ஞானம், தெய்வாம்சம் இவற்றையெல்லாம் அறிந்தவராதலால், மன்னனிடம் சென்று அவரது பெண்ணைத் தனக்குத் திருமணம் முடித்துத் தரவேண்டும் என்று வேண்டினார்.
அப்பொழுது லோபாமுத்ரா அகத்தியரிடம் ஒரு நிபந்தனை விதித்தாள். எனக்கும் உங்களைப் போன்ற ஞானியை திருமணம் முடிப்பதில் விருப்பம் தான். ஆனால், நீங்கள் என்னை எப்பொழுதும் இணை பிரியாமல் இருக்கவேண்டும் என்று வேண்டினாள். அகத்திய முனியும் அதற்கு இசைந்தார்.
அவர் முனிவர் ஆனபடியால், உலக நன்மை கருதி எப்பொழுதும் எங்காவது சஞ்சரித்துக் கொண்டேயிருப்பார் அல்லவா?.
அச்சமயங்களில், தன் மனைவியை நீராக மாற்றி, தன் கமண்டலத்தில் ஊற்றி, எடுத்துச் சென்று விடுவார். இப்படியாக, லோபாமுத்ராவிற்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றி வந்தார்.
ஆனால், லோபாமுத்ராவின் ஞானம், பொறுமை, கனிவு அருள் என அனைத்தும் மக்களுக்கு பயன்பெறவேண்டும் என்பது தான் தெய்வ சங்கல்பம். முன்பு சிவபிரானிடம், அதையே வரமாக லோபமுத்ரா அன்னையும் வேண்டியிருந்தபடியாலும், தென்பகுதி மக்கள் பஞ்சத்தால் வாடுவதைஉணர்ந்து தான் தவம் இயற்றிய காலத்தில் உதவ துடித்துக் கொண்டிருந்த படியாலும் தகுந்த காலத்திற்காக காத்திருந்த அந்த தருணமும் கனிந்து நெருங்கியது. இந்த நிகழ்வு அனைத்திற்கும் தான் ஒரு கருவி என்பதை அகத்தியரும் உணர்ந்தே இருந்தார். ஆனால், காவிரி பரந்து விரிவதற்குத் தகுந்த இடத்தைத் தேர்வு செய்வதில் அவருக்கு குழப்பம் இருந்தபடியால், விநாயகப் பெருமானை பிராத்தித்துக் கொண்டார்.
ஆம்! அகத்தியரும் வழக்கம் போல், தன் மனைவியை கமண்டலத்தில் இருத்தி எடுத்துக் கொண்டு குடகு மலைப் பகுதிக்கு வந்து, ஓரிடத்தில் அமர்ந்து தன் நித்ய கர்மாவினை செய்யும் பொருட்டு, கமண்டலத்தை கீழே வைத்துவிட்டு, தியானம் மேற்கொண்டார்.
அச்சமயம், விநாயகப் பெருமான் காக்கை உருவில் வந்து, தன் தண்ணீர் தாகத்திற்கு நீர் அருந்துவது போல், கமண்டலத்தின் அருகே வந்து, தன் அலகால் கமண்டல நீரை தள்ளி, காவிரி நதி நீராக பெருக்கெடுத்து ஓடும் படி செய்தார்
கமண்டலம் உருளும் சத்தம் கேட்டு தியானம் கலைந்து கண் விழித்த அகத்தியர், காகம் நீரை தள்ளிவிட்டதை அறிந்து கடுங்கோபங்கொண்டு அதை தண்டிக்க முற்பட்டார். அப்பொழுது காக்கையாக வந்து நாடகம் ஆடிய விநாயகப் பெருமான் காட்சி அளிக்கவும், உண்மை உணர்ந்து தன் தலையில் தானே பிள்ளையார் குட்டு போட்டுக் கொண்டு மன்னித்தருள வேண்டினார்.
இப்படிப் பல ஆண்டுகள் அங்கு காவிரியுடனேயே இருந்த அகத்திய முனி, தனது உலகப்பணிகளையும், காவிரியின் பணிகளையும் கருத்தில் கொண்டு மலை உச்சிக்குச் சென்று, ஆழ்ந்த சிந்தனையுடன், காவிரியை கூர்ந்து நோக்கி, பின் ஆசிர்வதித்துவிட்டு, அங்கிருந்து அகன்றார்.
தனக்கு வாக்குக் கொடுத்துவிட்டு தன் கணவன் தன்னை விட்டு அகன்று சத்தியத்தை மீறியதை உணர்ந்த அன்னைக் காவிரியும் மனம் வருந்தினாள். அதனால், தன் போக்கை மாற்றிக் கொண்டு மலையிலிருந்து இறங்கி, மறைந்து, பின் தலைக்காவிரியில்,
பாகமண்டலாவில் மீண்டும் தோன்றி தென்னகம் முழுதும் பாய்ந்து மக்களின் பசி, பிணியைப் போக்கி வளப்படுத்தியவாறே கடலில் கலக்கத் தொடங்கினாள். இப்படிப்பட்ட புண்ணிய நதியாம் காவிரி அன்னையை 'தக்ஷிண கங்கை' எனப் போற்றுவர்.
No comments:
Post a Comment