மார்கழி மாதம் தேவர்களின் வைகறை பொழுது ஆகையால் வழிபாட்டிற்க்குரிய மாதமாகும். .
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி 2.1.2023 திங்கட்கிழமை 'வைகுண்ட
ஏகாதசி" ஆகும்.
இத்திருநாளில் மஹாவிஷ்ணுவின் இருப்பிடமாக கருதப்படும் வைகுண்டத்தின் "சொர்க்கவாசல்" திறக்கப்படுவதாக ஐதீகம். அதனால் பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து, பாடல்கள் பாடி துதித்து, அதிகாலையில் சொர்க்க வாசல் வழியே எம்பெருமானை வழிபடுவர்.
இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றிய, இந்த வைகுண்ட ஏகாதசியினைப் பற்றிய ஒரு சுவாரசியமான கதை.
ஒருமுறை மஹாவிஷ்ணூ ஊழிக்காலம் முடிந்து ஆழ்ந்த 'யோக நித்திரையில்' இருந்த பொழுது, அவர்தம் காதுகளிலிருந்து மது, கைடப என்ற இரு அரக்கர்கள் தோன்றினர். அவர்கள், விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் அமர்ந்திருந்த பிரம்மனிடமிருந்து நான்கு வேதங்களையும் அபகரித்தனர். உடன் பிரம்மா விஷ்ணுவைத் துயில் எழச் செய்து முறையிட, விஷ்ணுவும் 'ஹயக்ரீவராக மாறி அவர்களிடமிருந்த வேதத்தை கைபற்றினார்.
ஆயினும் கருணை கொண்டு அவர்கள் வேண்டும் வரம் அளிப்பதாகக் கூறினார்.
அதற்கு அவர்கள், நாங்கள் வேண்டுமானால் உங்களுக்கு வரம் அளிக்கிறோம் என்றனர்.
உடன் மஹாவிஷ்ணுவும் , அவர்கள் தன் கையாலேயே வதம் செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அசுரர்களும் கொடுத்த வாக்கை காப்பாற்ற , அவருடன் போரிட்டனர். கடைசியில், அவர்களை வீழ்த்திய போது, மஹாவிஷ்ணுவின் மஹிமையை அறிந்த அசுரர்கள், பகவானிடம் மோக்ஷம் வேண்டி நித்தியம் அவர் காலடியிலேயே இருக்கும் வரத்தைப்பெற்றனர்.
எம்பெருமானும் கருணையுடன் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று வைகுண்டத்தின் வடக்கு வாயிலை திறந்து அது வழியாக மதுகைடபர்களை பரமபதத்தில் சேர்த்துக் கொண்டார்.
அந்த பேரின்பத்தை உணர்ந்த அசுரர்கள், தங்களைப் போன்றே பக்தர்களுக்கும், கோயிலில் விக்கிரகமாக எம்பெருமான் சிலையை வடக்கு வாயில் வழியாக எழுந்தருளும் போது தரிசிப்பவர்களுக்கும் அவர் மோக்ஷத்தை அளிக்கவேண்டும் என பிரார்த்தித்தனர்.
ஏகாதசி என்றால் பதினொன்று அல்லவா?. நம் ஞான இந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து மற்றும் மனம் ஒன்று என இந்த பதினொன்றும் இறைவனிடத்தில் ஒன்றுபட்டு பரிபூரண வழிபாட்டில் இருக்கவேண்டும் என்பதே இதன் ஆழ்ந்த பொருள்.
வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்வு எவ்வாறு உருவாயிற்று என்பதை மது கைடப அரக்கர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்டியதன் மூலம் நமக்கு கிடைத்தது என்று தங்கள் மூலம் அறிந்து கொண்டோம்.
ReplyDeleteநன்றி
- V. Sugavanam
நன்றி மிக்க மகிழ்ச்சி. 🙏🙏🙏🙏🙏🙏
Delete