Wednesday 29 January 2020

த்ரைலோக்ய கௌரி விரதம், 19.1.2020. தை அமாவாசை 24.1.2020.


                                   த்ரைலோக்ய கௌரி விரதம்
       


 த்ரைலோக்ய கௌரி என்றால் மூவுலகிலும் பேரழகி என்று பொருள். தேவி உலக நலன் கருதி எடுத்த, பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரமாக கருதப்படுபவள் மஹாகௌரி. நம் உடலின் "ஸ்வாதிஷ்டான சக்கரத்தின்" அதிபதியாகத் திகழ்பவள். பக்தர்கள் விரும்பிய வரத்தை விரைந்து அளிக்கக் கூடியவள். 

சிவபெருமானின் மனைவியாக விளங்கிய 'சதிதேவி' தன் தந்தை தக்ஷனால் அவமானப்பட்டு, அவன் வளர்த்த யாக குண்டத்திலேயே தன் உயிரை நீத்தாள். தன் மனைவியின் பிரிவிற்கு பின் சிவபெருமான் இமயமலையில் ஆழ் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது சதிதேவி, இமயவானான பர்வத ராஜனின் மகளாக 'பார்வதி தேவி" எனும் பெயருடன் அவதரித்தாள். நாரதரின் அறிவுரைப்படி, தவம் புரிந்து கொண்டிருக்கும் சிவபிரானுக்கு பணிவிடை செய்தாள்.

           அச்சமயம், இந்திரனின் கட்டளைப்படி, மன்மதன் பார்வதியின் பால் சிவனுக்கு அன்பு உண்டாக வேண்டும் என்பதற்காக, தன் அம்பினை விட, அதன் பின் சிவபிரான் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார்.

                    இந்நிகழ்ச்சிக்குப் பின், திரும்பவும் தன் கணவனான சிவபெருமானை அடையும் எண்ணத்துடன் . பருவ நிலை மாற்றங்களான வெப்பம், மழை, குளிர், பெரும் புயல் மற்றும் வறட்சி என இவை எதையும் பற்றி கவலைப்படாமல்,  பார்வதிதேவி கடுந்தவம் மேற்கொண்டாள். பூமியின் இத்தகைய பருவ மாற்றங்களால் அன்னையின் திருமேனி கருத்த நிறமாக மாறியிருந்தது. அன்னையின் மன உறுதியை பலவாறு சோதித்து பின் இறைவன், அன்னையை திருமணம் செய்து கொண்டார். 

     அதன்பின், பிறிது வந்த நாளில், ஈசன் அன்னையின் கரிய நிறத்தை கேலியாக பேசி சீண்டி விளையாடினார். அதனால், அன்னை கோபங்கொண்டு, தான் இழந்த த பழைய நிறத்தை திரும்ப அடையவேண்டி, பிரம்மதேவனை பிரார்த்தித்தாள். அவளது பிரார்த்தனையில் மனம் இறங்கிய, பிரம்மன் "மானசரோவர் ஏரியில்" முங்கி எழும்படி கூறியருளினார். 

 [மான என்றால் மனம். சரோவர் என்றால் ஏரி. பிரம்மனின் மனதில் அதாவது அவர் மானசீகமாக உருவாக்கியதால், இப்பெயர் காரணம். ]

image.png

அதன்படி, மானசரோவரில் குளித்து எழவும் அன்னையின் மேல் படிந்திருந்த 'கருமை நிறம் தண்ணீரில் கரைந்து, மிகுந்த ஒளி பொருந்திய 'வெண்மை நிறத்தவளாக அவளது ஆடை ஆபரணங்கள் அனைத்தும் தூய்மையான வெண்மை நிறமாக அமையப் பெற்றாள். 

image.png

இதனால் தூய்மையான வெண்மை நிறத்தவள் என்ற பொருளில் 'மஹாகௌரி' என அழைக்கப்பட்டாள். இவள் தீயவர்களை தண்டிக்கும் அதே சமயம், நல்லவர்களுக்கு எந்த தீங்கும் நேராமல் பாதுகாக்கிறாள். தன் பக்தர்களுக்கு மரணபயம், மறுபிறவி குறித்த பயத்தையும் போக்கி, ஆன்மிக ஞானத்தை வழங்குபவளும் இவளே. 

    ஜனவரி 19 ஆந்தேதி ஞாயிற்றுகிழமை 2020 "த்ரைலோக்ய கௌரி விரதம்". இந்த நாளில் அன்னையை நினைத்து புஜித்து விரதம் இருந்து வழிபட, பிறவியற்ற மோக்ஷம் கிடைக்கும் என்பது ஐதீகம்.       
                 
                          "தை" அமாவாசை


      ஜனவரி 24 2020 வெள்ளிக்கிழமையன்று,  விசேஷமான "தை அமாவாசை" தினமாகும்,

image.png

  ஆடி அமாவாசையில் பிதுரு லோகத்திலிருந்து, யமதர்ம ராஜனின் அனுமதியுடன் பூவுலகில் வாழும், தன் தலைமுறையினரைக் காண வந்த நம் முன்னோர்கள், தை அமாவாசையன்று  தங்கள் லோகத்திற்கு திரும்பிச் செல்கிறார்கள். அதனால் அன்று நாம் அவர்களுக்கு 'திதி' கொடுத்து அவர்களின் ஆசியைப் பெற்று அவர்களை, வழியனுப்புவதாக ஐதீகம்.



Sunday 5 January 2020

நகரத்தார் பிள்ளையார் நோன்பு








நகரத்தார் பிள்ளையார் நோன்பு



 ஆவாரம் பூவும், அரிசி மாவு பிள்ளையாரும்.
         

    நகரத்தார்களின் முக்கியமான நோன்பு பிள்ளையார் நோன்பு. நகரத்தார் வாணிபத்தின் பொருட்டு கடற்பயணம் மேற்கொள்வர். ஒருமுறை நகரத்தார்கள் ஒன்றுகூடி, காவிரிபூம்பட்டினத்தில் இருந்து கடற்பயணத்தை மேற்கொண்டனர். அப்பொழுது கார்த்திகை தீபத்திருநாளன்று,  கடலில் சூறாவளி காற்று ஏற்பட்டு, கப்பலின் திசை மாறி நிலப்பரப்பை அடையமுடியாமல் சிக்கித் தவித்தனர்.




 தாங்கள் வணங்கும் தங்களின் குலதெய்வமான மரகத பிள்ளையாரை நினைத்து தங்களை காக்கும் படி வேண்டினர். அன்றிலிருந்து ஒவ்வொரு நாட்களையும் கணக்கிடுவதற்காக தங்கள் வேஷ்டிகளிலிருந்து ஒரு நூலை எடுத்து பத்திரப்படுத்தினர். 21 நாட்கள் கழிந்ததும் அவர்கள் ஒரு தீவின் கரையை அடைந்தனர்.




      அன்று சஷ்டி திதி சதய நக்ஷத்திரம் கூடிய சுபதினம்.தங்கள் உணவிற்க்காக பயணத்தின் போது கொண்டு வந்த அரிசி மாவு, வெல்லம், நெய் முதலியவற்றை கலந்து பிள்ளையார் போல் பிடித்து வைத்து 21 வேஷ்டி நூல்களையும் சேர்த்து திரி போல் செய்து அந்த மாவு பிள்ளையாரில் வைத்து ஏற்றினர்.அத்தீவில் கிடைத்த ஆவாரம் பூவைக் கொண்டு பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்தனர். 

                                பின் பிள்ளையார் அருளால் அவர்கள் மீண்டு பத்திரமாக காவிரிபூம்பட்டினத்தை அடைந்து தங்கள் சமூகத்தினரிடையே நடந்தவற்றை எல்லாம் விவரித்தனர். 

   தங்கள் மக்களில் பெரும்பாலானோரை காப்பாற்றிய மரகத பிள்ளையாரை ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருநாளிலிருந்து 21 நாள் சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் அரிசி மாவு பிள்ளையார் செய்து பத்தம் புது வேஷ்டியில் இருந்து 21 நூல்களை எடுத்து திரியாக்கி, மாவுப் பிள்ளையாரில் வைத்து விளக்கேற்றி, ஆவாரம் பூவைக் கொண்டு பூஜித்து, தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் காக்குமாறு பிள்ளையாரை வேண்டுகின்றனர்.பின் அந்த மாவு பிள்ளையாரை பிரசாதமாக உண்டு மகிழ்வர் .





         ஆடவர்களால் முதன்முதலில் துவக்கப்பட்ட இந்த நோன்பு, இன்றளவும் வீட்டின் தலைமகன் எடுத்துக் கொடுக்க, மற்றவர்கள் இறைவனை வேண்டி அந்த 
மாவிளக்னை பெற்று மகிழ்வுடன் உண்பர். வேலை நிமித்தமாகவோ வேறு காரணத்தினாலோ ஆண்கள் வீட்டில் இல்லையென்றாலும், ஒரு வயது ஆண்குழந்தையாக இருந்தாலும், அந்தக் குழந்தையின் கைகளில் இருந்து பெண்கள் விளக்கினை பெற்றுக் கொள்வர். 

     கற்பகத்தான் அருளால் அனைவரின் வாழ்விலும் மங்கலங்கள் பெருகட்டும்.

    தகவல் உபயம் : முகப்பேர் டைம்ஸ் ஆசிரியர்
   
 


உயர்திரு. அண்ணாமலை அவர்கள்..
                             நன்றி சார்.
                                                         🙏🙏🙏🙏🙏🙏🙏