பெருந்திரளாக கூட்டமாக பிதுருக்கள் எனப்படும் நம் முன்னோர்கள் தன் சந்ததியினருக்கு ஆசி வழங்குவதற்கென்றே, யமதர்ம ராஜனிடம் அனுமதி பெற்று, நம்மை நாடி வரும் தினமான "மஹாளய பக்ஷம்" 21.9.2021 செவ்வாயன்று ஆரம்பம் ஆகிறது.
புரட்டாசி மாத பௌர்ணமியை அடுத்த பிரதமை திதி முதல் அமாவாசை வரையிலான பதினைந்து நாட்களும் 'மஹாளய பட்சம்' எனப்படுகிறது.
இந்த பக்ஷமான பதினைந்து நாட்களும் தர்ப்பணம் செய்வது, மிகச் சிறந்த புண்ணியமாகக் கருதப்படுகிறது என்றாலும், அப்படிச் செய்ய இயலவிட்டாலும், தங்கள் தந்தையின் முக்கிய திதி தினத்திலாவது கட்டாயம் 'தர்ப்பணம்' செய்யவேண்டும் என்பது நியதி.
இது நமக்கும் நம் முன்னோர்களுக்குமான பரஸ்பர உபகாரம் என்று கூடச் சொல்லலாம். ஆம்! நாம் தர்ப்பணம் கொடுப்பது அவர்களது ஆசியைப் பெறுவது மட்டுமில்லாமல், அவர்களுக்கான உணவு மற்றும் அவர்களின் முக்திக்கும் வழி வகுக்கும்.
முன்னோர் வழிபாட்டின் முக்கியத்துவத்தை விளக்க ராமாயணக் கதையே சாட்சியாக உள்ளது.
ராமபிரான், 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம். ராமரின் பிரிவால் தசரதரின் உயிரிழப்பு. இது அனைவரும் அறிந்ததே!.
வனவாசம் காரணத்தால், ராமரால், தன் தந்தைக்குச் செய்யவேண்டிய ஈம காரியங்கள் செய்ய இயலாமல் போனது. இதனால் தசரதனுக்கும் மோக்ஷம் தடைபட்டது.
இந்த நிலையில், சீதை ராவணனால் கவரப்பட்ட போது, சீதைக்கு நேர்ந்தது என்ன? உயிருடன் இருக்கிறாளா இல்லையா? அவளை எங்கு தேடுவது? என்று சீதையைப் பற்றிய எந்தவொரு தகவலும் ராமரால் அறிய இயலவில்லை. அப்பொழுது 'ஜடாயு' எனும் கழுகு அரசனின் மூலமாகவே, நடந்ததை அறிந்து கொள்கிறார்.
இந்த ஜடாயு என்பவர் ஸ்ரீராமரின் தந்தை தசரதனின் ஆருயிர்த் தோழர். நன்பனின் மகன் தனக்கும் மகனாவான் என்றும்,தன் மருமகளான சீதையை ராவணனிடமிருந்து காப்பாற்ற, ராவணனுடன் போரிட்டு, அவனால் இறகுகள் வெட்டப்பட்டு, குற்றுயிரும், குறையுயிருமாக ராமர் வரும் வரை தன் உயிரை கையில் பிடித்தவாறு சீதையைப் பற்றிய தகவல்களை அளித்து ராமரது மடியிலேயே உயிரைத் துறந்தார் ஜடாயு .
இதனால், ராமபிரானும், அவரைத் தன் தந்தையாகவே பாவித்து அவருக்கு, ஈமச் சடங்குகளைச் செய்து, அவருக்கு முக்தியும் அளித்தார்.
ராமர் தன்னை கடவுளாக காட்டிக் கொள்ளாமல் மனிதன் என்றே வாழ்ந்து காட்டினார். அப்படியிருக்க! அவரால் எப்படி ஜடாயுவிற்கு மோக்ஷம் அளிக்க முடியும்? என்ற கேள்விக்கு, ராமாயணத்தில் வால்மீகி முனிவரே பதிலும் அளித்துள்ளார்.
"சத்யேன லோகான் ஜயதி".
அதாவது எவனொருவன், சத்ய தர்ம வழியில் நடக்கிறானோ! அவன் அனைத்து உலகங்களையும் ஜயித்தவன் ஆகிறான். என்பதே இதன் பொருள். அதனால் ராமர் வைகுண்டத்தையும் தன் சத்ய தர்மத்தினால் ஜயித்து, ஜடாயுவிற்கு மோக்ஷத்தை அளித்தார்.
தசரதனுக்குக் கூட கிடைக்காத பெரும்பேறு அதிர்ஷ்டசாலியான ஜடாயுவிற்கு கிடைத்தது.
அத்துடன் ஸ்ரீராமர் தன் தந்தை தசரதனுக்கு, ஒவ்வொரு முறை திதி கொடுப்பதற்காக, " நான்கு பிண்டங்களை" இடுவார் அல்லவா?!. ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த நான்கு பிண்டங்களும் புழுக்களாக மாறின. இதனால், மிகுந்த மனவேதனையடைந்தார். தன்னால் தன் தந்தைக்கு முக்தியை அளிக்க முடியவில்லையே என சர்வேஸ்வரனான சிவபிரானை மனமுருகி துதித்தார்.
சிவபிரானும் அவரை மந்தாரவனத்திற்குச் சென்று , வழிபட்டு பின் அருகிலுள்ள, ''அரசலார் ஆற்றில்" புனித நீராடியபின், பிதுரு தர்ப்பணம் செய்யும்படி பணித்தார்.
அங்ஙனமே. சிவனாரின் வழிகாட்டுதலின்படி, தர்ப்பணம் செய்து நான்கு பிண்டங்களை வைத்தார்.
என்ன ஆச்சரியம்! நான்கு பிண்டங்களும், நான்கு சிவலிங்கங்களாக மாறின. அத்துடன், தசரதனுக்கும் மோக்ஷம் கிடைத்தது. அது முதல் இங்குள்ள ஈஸ்வரர் "முக்தீஸ்வரர்" என அழைக்கப்படலானார்.அம்பிகை, திரு நாமம் "ஸ்வர்ணவல்லி" . அது முதல் . இந்த திருத்தலமும், 'தில தர்ப்பணபுரி' என போற்றப்பட்டது. [தில என்றால் எள் எனப் பொருள்]. மாயவரம், திருவாரூர் வழித் தடத்தில் அமைந்துள்ள இவ்விடம் காலப்போக்கில் பேச்சு வழக்கில் மருவி தற்போது 'செத்தலபதி" என அழைக்கப்படுகிறது.
Superb. Rare information. Very useful. Keep writing.
ReplyDeleteமிக்க நன்றி. 🙏🙏🙏
ReplyDeleteExcellent information about mahalayam,,
ReplyDeleteSuperb
ReplyDeleteGood one 👏👌
ReplyDelete