சைவ ஆகமங்கள் மொத்தம் 28. அதில் நான்காவதான காரணாகமம் என்ற ஆகம நூலில் பூர்வ மற்றும் உத்தர என இரண்டு பாகங்கள் உள்ளன. இவற்றில் ஆசார அனுஷ்டான விதிகள் பற்றி கூறப்பட்டுள்ளன.
அதில் முக்கியமாக இந்த நூலில் ""ஸ்நான விதி" என்பது பற்றி சிவாகம ரத்னாகரம் சிவஸ்ரீ. கண்டமங்கலம் "சுந்தர குருக்கள்" அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்.
அன்னாரது 25 ஆவது ஜயந்தி வருகிற 30.112021 செவ்வாயன்று கொண்டாடப்பட இருக்கின்றது.
இந்த ஸ்நான விதிகளைப் பற்றி காஞ்சி முனி என போற்றப்படும் மஹாபெரியவா. ஸ்ரீ . சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் "தெய்வத்தின் குரல்" மூன்றாம் பாகத்தில் எளிமையாக விளக்கியுள்ளார்.
சுவாரஸ்யமான இத்தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஸ்னானம் - குளியல் என்பது உடலை சுத்தப்படுத்துவது. இதில் ஐந்து வகையான ஸ்னான விதி குறிப்பிடப்பட்டுள்ளன. பஞ்ச பூதங்களால் நம்மைத் தூய்மைப்படுத்தும் விதத்தை அறிந்து கொள்வோம்!.
1.பஞ்ச புதங்களில் ஒன்றான வருணன் அல்லது நீர் :- நதி, குளங்கள் ஆறுகள் இவற்றில் முங்கிக் குளிப்பதே உத்தமமானது.
வாளியில் த்ண்ணீரை நிரப்பியோ அல்லது ஷவரில் குளிப்பதோ சுத்தமான குளியல் ஆகாது. இது இரண்டாம் பட்சம் தான் இருப்பினும், இல்லத்தினில் கிணற்றில் நீர் இறைத்து நீராடுவதும் சாலச் சிறந்தது என்கிறார்
2. அக்னி ஸம்பந்தம் :- விபூதி ஸ்னானம் . நெருப்பிலிட்டு சாம்பலாகி விபூதி பெறப்படுவதால், இதற்கு "பஸ்மா" என்று பெயர். தண்ணீரை விட்டுக் குழைக்காமல் அப்படியே வாரி இட்டுப் பூசிக் கொள்வது. இதற்கு "பஸ்மோத் தூளனம்" எனப் பெயர். அதாவது விபூதிப் பொடி.
3. கோ தூளி : பசுக்கள் கூட்டமாகச் செல்லும் பொழுது, அதன் குளம்புகள் மண் தூசுகளை காற்றில் புழுதி கிளப்பியவாறு செல்லும் அல்லவா?!
இதில், மண் எனும் பஞ்ச பூதங்களில் பூமியும் வாயுவும் ஒருசேர இடம் பெறக் கூடிய குளியல் ஆகும். இந்த காற்றுக் குளியலுக்கு "வாயவ்யம்" எனப் பெயர்.
4. திவ்ய ஸ்னானம் :-
சில நேரங்களில் வெயில் அடிக்கும் பொழுதே மழையும் பெய்யும் அல்லவா?! இப்படிப்பட்ட இந்த மழை தேவலோகத்திலிருந்து வருவதற்கு சமானம் என்று கூறுகிறார். அதனால் மழையும் வெயிலும் ஒருசேர நிகழும் சமயம் நாம் அதில் நிற்பது திவ்யக் குளியல் என்கிறார். இது பஞ்சபூதங்களில் ஆகாயம் சம்பந்தப்பட்டது
.
5. ப்ராஹ்மம் :-
மந்திர ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்கிறோம் அல்லவா?! நன்றாக நாம் குளித்திருந்தாலும் நம் வீட்டில் சந்தியாவந்தனம், பூஜை செய்யும் பொழுது பஞ்சபாத்திரத்தினை அலங்கரித்து மந்திரம் சொல்லி அந்த மந்திர நீரை நாமே நம் மீது தெளித்துக் கொள்வது. அல்லது யாகம் மற்றும் ஹோமம் செய்யும் பொழுதோ மந்திர ஜலத்தால் ப்ரோகிதர் தர்ப்பை கட்டைக் கொண்டு நம் மேல் தெளித்து சுத்தப்படுத்துவது. இந்த வகையான ஸ்னானத்திற்குப் பெயர் தான் "ப்ராஹ்மம்" என்பதாகும்.
இப்படி இந்த எல்லா வகைக் குளியலிலும் நாம் பகவானின் சிந்தனையுடன் பகவன் நாமாவை உச்சரித்து செய்தால் அனைத்துமே "ப்ராஹ்மம்" தான்.