மஹாளய பக்ஷம் 2019
- புரட்டாசியில் பௌர்ணமியை அடுத்து வரும் 15 நாட்கள் பிதுருக்களுக்கு உரித்தான மஹாளய பக்ஷம் அல்லவா?. இந்த தினத்தில் நம் முன்னோர்கள் யமதர்ம ராஜனின் அனுமதியுடன் இப்பூவுலகிற்கு தங்களின் இல்லத்தை சொந்தங்களை நாடி வருவர்.
- இந்த மஹாளய தர்ப்பணம் யாருக்காக? எதற்காக? .
- நம் தாய், தந்தை, தாய் மற்றும் தந்தை வழி தாத்தாக்கள், பாட்டிகள்,சகோதரர்கள், மனைவி, மாமாக்கள், அத்தைகள், மகன், மகள், மருமகன், மருமகள், மைத்துனர், சகலை,நோயுற்ற தூரத்து உறவுகள், சந்ததி இல்லாதவர்கள் இவைகள் தவிர
- இரத்த சம்பந்த உறவுகள் இல்லாத தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் குரு, எஜமான், தொழிலாளி மற்றும் நண்பர்கள் என இவர்கள் அனைவருக்காகவும் செய்யப்படுவதால் இந்த மஹாளயபக்ஷம் மிகுந்த விசேஷம் நிறைந்ததாக போற்றப்படுகிறது.
- மஹாளய பக்ஷ 15 நாட்களும் விசேஷம் எனினும், பஞ்சாங்கத்தில் முக்கியமாக சில தினங்களை தனியாக சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கும் . அதனை விளக்கமாக அறிவோம்!.
- மஹாபரணி
- வருகின்ற புதன்கிழமை செப். 18. புரட்டாசி 1 ஆம்தேதி "மஹாபரணி" தினம். பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஜனனம் முதல் மரணம் வரை நெருப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.
- கார்ஹபத்யம், ஆவஹனீயம், தக்ஷிணாக்னி போன்று பலஅக்னி வகைகள் உள்ளன. ஆங்கீரஸர், தூம்ராக்னி மற்றும் அக்னிவேசர் போன்ற முனிவர்களால் அக்னி தேவன் இப்பூவுலகிற்கு அழைத்து வரப்பட்ட நாளே மஹாளய பட்சத்தில் வரும் மஹாபரணி ஆகும்.
- நித்ய சமையல் முதல் தீபம், மின் விளக்கு என பல வித வடிவங்களில் அக்னியின் பயன்கள் பலவித ரூபத்தில் நம்மிடையே புழக்கத்தில் உள்ளதல்லவா? நம் உடலிலும் உஷ்ணம் உள்ளது. ஏன்? நாம் உண்ட உணவை செரிமானம் செய்வதும் கூட ஒருவகை அக்னியே!.
- அறிந்தோ அறியாமலோ நெருப்பை தவறாக பயன்படுத்துவதால் {புகை பிடித்தல், சிறு உயிர்களை நெருப்பிலிட்டு துன்புறுத்துதல், கெட்ட எண்ணத்துடன் தீ வைத்தல் இன்னபிற} அக்னி தோஷம் தாக்கக்கூடும். இத்தகைய தோஷங்கள் தாக்காமல் இருக்கவும், தீ விபத்து நிகழாமல் இருக்கவும், இந்த மஹாபரணி அன்று ஹோமம் செய்தல், வீடு மற்றும் கோயில்களில் பசு நெய் தீபம் ஏற்றுதல் தோஷ நிவர்த்தியாக விளங்கும் .
- இதைத் தவிர இந்த தினத்தில் "யமதீபம்" என நம் வீட்டு வாசல் தெளித்து கோலமிட்டு தீபம் ஏற்றியோ அல்லது வீட்டின் மேற்கூரையில் அல்லது மொட்டை மாடியில் தெற்கு முகமாக அகல் விளக்கு ஏற்றி வைக்கவேண்டும். ஏனென்றால் இந்த மஹாளயபட்ச தினங்களில் இப்பூவுலகுக்கு வருகை தந்த நம் முன்னோர்கள் திரும்பிச் செல்லும் போது வெளிச்சம் காண்பிப்பது போல் ஆகும்.
- அத்துடன் மஹாளய பரணி நக்ஷத்திரம் யமதர்ம ராஜனின் "ஜன்ம நக்ஷத்திரம்" ஆகும்.
- இதனால் பிதுருக்கள் நம்மை ஆசீர்வதிப்பதோடு இந்த யமதீபம் ஏற்றுவதால் பிதுருலோக அதிபதியான யமதர்மராஜனும் மனம் மகிழ்ந்து நமக்கு அருள்வதோடு நம் முன்னோர்களையும் கரையேற்றுவார் என்பது ஐதீகம்.
- மத்யாஷ்டமி
- அந்தவகையில் செப். 22 .2019 ஞாயிற்றுக்கிழமை 'மத்யாஷ்டமி". அதாவது, சிற்சில காரணங்களால் அவரவர்களுக்கு உரித்தான திதியில் தர்ப்பணம் கொடுக்க இயலாமல் போனாலோ அல்லது இறந்தவரின் திதி தெரியாமல் போனாலோ இந்த 15 நாட்களில் நடுவே வரக்கூடிய அஷ்டமியில் திதி கொடுக்கலாம். நாள், வார, நக்ஷத்திரம் மற்றும் தோஷம் என்று இவைகளை பார்க்கத்தேவையில்லை.என்று இந்த மத்யாஷ்டமிக்கு ஒரு சிறப்பு நியதியினை வகுத்திருக்கிறார்கள்.
- அவிதவா நவமி
- 23.9.2019 ந்தேதி திங்கட்கிழமை "அவிதவா நவமி". 'விதவா' என்றால் முதலில் கணவன் இறந்தபின் இயற்கை ஏய்தியவர். அவிதவா என்றால் சுமங்கலியாக இறந்தவர் எனப் பொருள். சுமங்கலியாக காலமடைந்த பெண்களுக்கான தர்ப்பண தினம். இப்படி இந்த சுமங்கலிக்காக செய்யும் சடங்கில் 'திருமணத் தடை நீங்குவதோடு, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைவதும் புத்திகூர்மையான சந்ததியும் கிடைக்கப்பெறும் என்பது இதன் சிறப்பம்சம். அதுவும் அவர்தம் கணவர் உயிருடன் இருக்கும் வரை செய்யவேண்டும். .
- ஸன்யஸ்த மஹாளயம்
- புதன்கிழமை 25 ந்தேதி "ஸன்யஸ்த மஹாளயம்" . துவாதசி திதியான அன்றைய தினம் "சித்தி"அடைந்த சன்னியாசிகளுக்கு திதி கொடுத்தல் நலம்.
- கஜச்சாயை
- அடுத்த நாள் வியாழனன்று "கஜச்சாயை". அதாவது இந்த திரயோதசி திதியில் புண்ணிய தலங்களான "கயா, காசி மற்றும் இராமேஸ்வரத்திற்கு"ச் சென்று அனைத்து பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் ஆகும்.
- சஸ்திரஹத பிதுரு மஹாளயம்
- அடுத்த நாள் வெள்ளியன்று "சஸ்திரஹத பிதுரு மஹாளயம்". அதாவது போரில் வீரமரணம் அடைந்தவர்கள் அல்லது துர்மரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே அந்த நாளில் தர்ப்பணம் செய்யவேண்டும் என்பது நியதி.
28 .9.2019 சனிக்கிழமை அன்று "மஹாளயஅமாவாசை".
மேற்கூறிய ஒவ்வொரு திதிகளிலும் ஒவ்வொரு விதமான பலன்கள் அதைத் தவிர இந்த மஹாளய அமாவாசையில் திதி அல்லது படையல் கொடுப்பதால் நம் முன்னோர்கள் மகிழ்ந்து அனைத்து பலன்களையும் நமக்கு ஆசிர்வதிக்கின்றார்கள்.
Super. Informative. Nice
ReplyDelete