சூரிய, சந்திர கிரஹணம் பீடிப்பதற்க்கான பின்னணி கதை
டிசம்பர் 26 2019அன்று " சூரிய கிரஹணம்' பீடிக்க இருக்கிறது. சூரிய சந்திர கிரஹணம் நிகழ்வதற்கான புராணக் கதை . தேவர்கள் அசுரர்களின் துணை கொண்டு பாற்கடலை
கடைந்து அமுதத்தினை எடுத்தபின்,
தேவர்களும் அசுரர்களும் அமுதத்தின் பொருட்டு போரிட்டனர்.

அப்பொழுது, மஹாவிஷ்ணு அழகிய மோகினி உருவம் தாங்கி, தேவ அசுரர்கள் முன் தோன்றி, தான் இருவருக்கும் பகிர்ந்தளிப்பதாகக் கூறி தேவர்களை ஒரு பக்கமாகவும், அசுரர்களை மற்றொரு பக்கமாகவும் பிரித்து அமர வைத்தார்.
அசுரர்கள் அமிர்தத்தை பருகி திவ்ய தேஜசை அடைந்து விட்டால், அனைவரையும் துன்புறுத்துவார்கள். அவர்களது அட்டகாசம் தாங்கமுடியாததாக ஆகிவிடும். அதனால் உலகிற்கே கேடு தான் நிகழும். அதனால் முதலில் தேவர்களுக்கு அமிர்தத்தை அளிப்பதாகக் கூறி, இரண்டாவது முறையும் உலக நலன் கருதி தேவர்களுக்கே வழங்கலானார்.
அசுரர்கள் அனைவரும் மோஹினியின் திவ்ய அழகில் கட்டுண்டு இருந்தார்கள். ஆனால் அதில் ஒரு அசுரனுக்கு மட்டும் மோஹிணி தங்களை ஏமாற்றுவதாக சந்தேகம் மேலோங்கியது. அதனால் அவன் தேவர்களின் உருவெடுத்து தேவர்களின் வரிசையில் அமர்ந்து மோகினியிடமிருந்து அமிர்தம் வாங்கிப் பருக, சந்திரனும் சூரியனும் அவனை காட்டி கொடுத்தனர். உடன் மஹாவிஷ்ணுவும் சக்கராயுதத்தை ஏவி, அசுரனின் சிரத்தை வெட்டினார். ஆயினும், அமிர்தத்தின் பலனாய் தலை துண்டானாலும் அந்த அசுரன் இறக்கவில்லை. அவனே 'ராகு, கேது' என நவகிரகங்களில் போற்றப்படுகிறார். காட்டிக் கொடுத்ததற்கு தண்டனையாக சந்திரனையும், சூரியனையும் விழுங்கி, பின் விடுவதனால் சூரிய, சந்திர கிரகணம் நிகழ்வதாக புராணக் கதைகள் கூறுகின்றன.
No comments:
Post a Comment