ஐப்பசி அன்னாபிஷேகம் மற்றும் கடை முழுக்கு
அம்மையும் அப்பனும் கலந்த அருவுருவமான லிங்கமூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் அன்னாபிஷேகத் திருநாளே ஐப்பசி பௌர்ணமி திதி. 12.11.2019 செவ்வாய்கிழமை அன்று 'மஹா அன்னாபிஷேகம்'.
அபிஷேகப் பிரியரான சிவனுக்கு 70 வ்து வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வர். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. ஆகையால், ரிஷிகள் ஐப்பசி மாதத்தில் லோக க்ஷேமத்தை கருத்தில் கொண்டு சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வதை நடைமுறைபடுத்தினர். இப்படி லிங்கத்தின் மேல் சாற்றப்பட்ட அன்னத்தை பிரசாதமாக பக்தர்களுக்கு அளிப்பதோடு, மீதம் உள்ளதை பறவை விலங்கினங்களுக்கும் அளித்தும் நீர்நிலைகளில் கரைத்து நீர்வாழ் உயிரினங்களும் இறை பிரசாதத்தை உண்ண வகை செய்கிறார்கள்
இதன் மற்றொரு சிறப்பு என்னவெனில், சாபத்தினால் தேய்ந்து வளர்கின்ற சந்திரன் இந்த ஐப்பசி பௌர்ணமியின் போது தனது சாபம் முழுமையாக நீங்கப் பெற்றவனாக பதினாறு கலைகளுடன் சிவலிங்கத்தின் மேல் நன்றியுடன் தன் 'அமிர்த கலையை' பொழிந்து பூரண நிலவாக காட்சியளிக்கிறான்.
இந்த ஐப்பசி பௌர்ணமியின் போது தான் சந்திரன் பூமிக்கு அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியின் மீது பொழிகிறது என்று இக்கருத்தை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஐப்பசி மாதம் துலா ஸ்நானத்திற்கு பெயர் போனது. அகத்திய முனிவரின் மனைவியான 'லோபாமுத்ரா" தான் அன்னை காவிரியாக புனித நதியாக தென்னகத்தை வளம் கொழிக்கச் செய்கிறாள்.
காவேரன் என்ற அரசன் புத்ர பாக்கியத்திற்காக பிரம்மாவை வேண்ட, அவனுக்கு புத்ரபாக்கியம் இல்லாவிடினும் அவன் தவத்தின் பலனாய் மானசீகமாய் பெண் குழந்தையை உருவாக்கி, அரசனுக்கு அளித்தார். காவேரன் மகளானதால் "காவேரி" என பெயர் பெற்றாள்.பின் லோபாமுத்ரா என்ற பெயருடன் அகத்தியரை மணந்தாள்.
லோபாமுத்ராவின் புனிதத் தன்மை உலகுக்கு பயனாக வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அகத்திய முனி' அன்னையை காவிரி நதியாக வலம் வரச் செய்தார்.
இந்த ஐப்பசி மாதத்தில் அனைத்து புண்ணிய நதிகளும் காவிரியில் சங்கமிப்பதாக ஐதீகம். அதனால் இந்த ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராடுதல் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிட்டும். நவம்பர் 16 ந்தேதி சனிக்கிழமை துலாமாதம் ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான 'கடைமுழுக்கு' தினமாகும்.
No comments:
Post a Comment