நவராத்திரி
ஆற்றலின் இருப்பிடமாக விளங்ககூடிய சக்திதேவியை வழிபடுவதே இந்த "நவராத்திரி" விழாவின் சிறப்பு. தக்ஷிணாயன புண்யகாலம் புரட்டாசி மாதம் இன்றைய தினம் 29.9.2019 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை பிரதமை தொடங்கி நவமி திதி வரை பூஜிக்கப்படும் "சக்தி வழிபாடு" சாரதா நவராத்திரி என அழைக்கப்படும்.
பிரளயம் முடிந்து இறைவன் திரும்பவும் உலகை படைக்க எண்ணிய பொழுது இச்சா, கிரியா மற்றும் ஞான சக்திகள் உருவாயின. இவைகள் முறையே துர்கா,லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி என முப்பெருந்தேவிகளைக் குறிக்கும். முதல் மூன்று நாட்கள் துர்கா அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்குமான வழிபாட்டிற்க்குரியது.
இந்த நவராத்திரியில் யோகிகள், ஞானிகள் "நவதுர்கா" பூஜையை பற்றி விசேஷமாகக் கூறுகிறார்கள். இந்த நவதுர்கைகள் முறையே, "சைலபுத்ரி, ப்ரஹ்மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காளராத்ரி, மஹாகௌரி மற்றும் சித்திதாத்ரி".
இமவானின் மகளான தேவிசைலபுத்ரி. சைலம் என்றால் இமயமலை. அதனால் இவள் பார்வதி மற்றும் ஹேமவதி என அழைக்கப்படுகிறாள். யோகிகள் நவராத்திரியில் முதல் நாள் இத்தேவியை பூஜித்து தங்கள் யோக சாதனையை ஆரம்பிக்கின்றனர். ஏனெனில் நம் உடலில் உள்ள ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமான " மூலாதார சக்கரமாக" விளங்குகிறாள்.
இரண்டாம் நாள் தேவி "ப்ரஹ்மச்சாரிணி. தபஸ் கோலத்துடன் கையில் கமண்டலம் ஏந்தியவளாய் விளங்கும் அன்னையை பூஜித்து இரண்டாம் சக்கரமான "ஸ்வாதிஷ்டானத்தை" அடைவர்.
மூன்றாம் நாள் தேவி சந்திர காண்டா. பிறை சந்திரனை சூடிய அன்னையை வழிபட்டு, மூன்றாம் சக்கரமான 'மணிபூரகத்தை" அடைவர்.
நான்காம் நாள் தேவி கூஷ்மாண்டா உலகின் படைப்பின் சக்தியாகவும், சூரிய மண்டலத்தை இயக்கும் சக்தியாகவும் திகழ்கிறாள். அன்னையை பூஜித்து யோகிகள் 'அனாஹத சக்கரத்தை' அடைகிறார்கள்.
ஐந்தாம் நாள் தேவி ஸ்கந்தமாதா- சூரபத்மனை வென்று தேவ சேனாதிபதியாக விளங்கும் முருகனின் தாயாக போற்றப்படுகிறாள். அன்னையை வழிபட்டு யோகிகள் 'விசுத்தி' சக்கரத்தை அடைகின்றனர்.
ஆறாம் நாள் தேவி காத்யாயணி- காதா என்ற முனிவரின் விருப்பத்திற்கேற்ப அவரது மகளாக 'காத்யாயணியாக' அவதரித்தாள். இவளே மஹிஷாசுரமர்த்தினியாகவும் விளங்குபவள். இந்த அன்னையின் துணை கொண்டு யோகிகள் ஆறாவது முக்கண் சக்கரமான "ஆக்ஞா" சக்கரத்தை அடைவர்.
ஏழாம் நாள் தேவி காளராத்ரி. எதிரிகளுக்கு மரணபயத்தை கொடுக்கக்கூடியவள். பேய் பிசாசுகள் எல்லாம் இவளைக் கண்டால் பயந்து ஓடும். யோகிகள் அன்னையின் துணை கொண்டு ஏழாம் சக்கரமான 'சஹஸ்ராகாரத்தை' அடைவர்.
எட்டாம் நாள் தேவி மஹாகௌரி. தூய்மையின் வடிவான இவள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றுபவள். யோகிகள் அன்னையின் அருளாசியோடு எட்டாவது சக்கரமான "ஸ்வாதிஷ்டானத்தை" அடைவர்.
ஒன்பதாம் நாள் தேவி சித்திதாத்ரி- அஷ்டமாசித்தியைத் தருபவள்.சிவபெருமானும் இத்தேவியை வழிபட்டு அஷ்டமாசித்தியடைந்து 'அர்த்தநாரீஸ்வரர்" ஆனார். இந்த மஹா நவமியில் இவளை வழிபட பக்தன் தேவை என்பதே இல்லாத பரம நிலையடைந்து "பேரானந்தத்தை" அடைவான். அதன்பின் பிறவியற்ற மோக்ஷமும் அடைவர்.
No comments:
Post a Comment